பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்413

  (இ-ள்) வண்டுலாம்....கூட - அவ்வாறு நின்ற, வண்டுகள் உலவுதற் கிடமாகிய கூந்தலையுடைய பரவையார் தமது முன்பு வன்றொண்டராகிய நம்பிகள் வந்து சேர; கண்டபோது....கரைகாணாது - கண்டபொழுது உள்ளத்திலே எழுந்த காதற் பெருக்கத்தின் எல்லை காணமாட்டாராகி; கொண்ட....வணங்க - மேற்கொண்ட நாணும் அச்சமும் மிகுதியாகப் பெருக அவரை வணங்க; அக்குரிசிலாரும்...சார்ந்தார் - அந்தப் பெருமையுடையாராகிய நம்பிகளும் அவரது குளிர்ந்த தளிர் போன்ற செவ்விய கையினைப் பற்றிக்கொண்டு திருமாளிகையினுள்ளே புகுந்தனர்.
  (வி-ரை) வண்டுலாங் குழலார் - 3485 - 3529 - பார்க்க.
  வன்றொண்டர் - முன்னரும் இப்பெயராற் கூறிய குறிப்பும் நினைவு கூர்க. 3484 முதலியவை பார்க்க.
  கண்டபோது - என்றது காட்சி காரணமாகிய நிகழ்ச்சியினையும், உள்ளக் காதல்....வணங்க - என்றது அதனால் விளைந்த அகநிகழ்ச்சியினையும் குறித்தன.
  நாண் அச்சம் - பெண்மைக்கு இயல்பாகிய நாண் முதலிய நாற்குணங்களுள் இவை ஈண்டு வெளிப்பட்டன என்ற பொதுமைக் குறிப்பும், மூண்ட புலவியினால் தாம் செய்தவற்றையும் சொல்லியவற்றையும் எண்ணியதனால் நாணும், தமது நாயகராகிய தலைவர்பாலினும் இறைவர் பாலினும் செய்த அபசாரங்களை எண்ணியதனால் அச்சமும் கொண்டனர் எனச் சிறப்புக் குறிப்பும் போந்தன; நாற்குணங்களுள் மடம் பயிர்ப்பு என்ற ஏனையவை இயைபின்மையின் இங்கு வெளிப்படாது நின்றன என்க. கொண்ட - நினைதலால் மேற்கொண்ட.
  குரிசில் - பெருமையுடையார்; புலவியாற் செய்தவற்றை மனங்கொள்ளாது அன்பு மிகுந்து போந்த நிலைக் குறிப்பு.
  செங்கை பற்றிக்கொண்டு மாளிகையுட் சார்ந்தார் - இச்செயலே மனநிலையைப் புலப்படுத்திற்று என்க. அன்பின் முதிர்வு.
  காதல் கரைகாணாது - ஊடலை மறந்து கூடற்கட் சென்ற மனநிலையாலாகியது என்பர் முன் உரைகாரர்.
 

380

3535
ருவருந் தம்பி ரானார் தாமிடை யாடிச் செய்த
திருவருட் கருணை வெள்ளத் திறத்தினைப் போற்றிச் சிந்தை
மருவிய வின்ப வெள்ளத் தழுந்திய புணர்ச்சி வாய்ப்ப
ஒருவரு ளொருவர் மேவு நிலைமையி லுயிரொன் றானார்.
 

381

  (இ-ள்) இருவரும்....போற்றி - (நம்பிகளும் பரவையாரும் ஆகிய) இருவரும் தமது பெருமானார் தாம் இருவரினிடையே போந்து தம்பாற் செய்த திருவருட் கருணைப் பெருக்கினது திறத்தைத் துதித்து; சிந்தை...வாய்ப்ப - மனத்துள்ளே பொருந்திய இன்பப் பெருக்கினுள்ளே அழுந்திய ஒன்றிய நிலை சார்தலினாலே; ஒருவருள்...ஒன்றானார் - ஒருவருள்ளே ஒருவர் பொருந்தும் நிலைமையில் இருவர்களும் கூடி உயிர் ஒன்றாக ஆயினர்.
  (வி-ரை) இடையாடி - இருவர்பாலும் இங்குமங்குமாகச் சென்று பிணக்கு நீங்கச் செய்த; "நடுவிடையாடி" (1643).
  திருவருட் கருணை வெள்ளத்திறம் - அருள் - கருணை - ஒரு பொருளன; அருள் -எல்லா உயிர்களின் மேலும் செல்வது; கருணை - அது கூர்ந்து சிறப்பிற் புலப்பட வருவது; "அருள் வித்திட்டுக் கருணைநீர் பாய்ச்சி" (குமரகுரு); வெள்ளம் -பெருக்கு;