பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்272

அணிந்த இறைவரது திருவடி நிழலினைச் சேர்ந்து உண்மையாகிய வழியில் வரும்
அன்பினாலே மீளாநிலையாகிய முத்தியினைத் தலைக்கூடினர்.
 

     (வி-ரை) இவ்வகை - திருவேடமே மெய்ப்பொருள், ஏனைய உடல் வேடங்கள்
பொருளல்ல என்ற உறைப்புப்பற்றி ஒழுகும் வகை; இகரச்சுட்டு முன்கூறிய
அன்புச்செயலின் கருத்து வகை; “அது எண்ணுவார்” (3989) என்று முன்
காட்டப்பட்டது; இவ் வகை - செயல்கள் எவ்வாறாயினும் கருத்து வகையால் இதுவே
என்பார் இகரச்சுட்டினாற் கூறினார்; ஏகாரம் - பிரிநிலை.
 

     அன்பினில் - நெறி - ஆற்றி - என்க; நெறி - ஆற்றுதலாவது
நெறிவழுவாது நின்று அதன்வழிச் செயலாற்றுதல். ஆற்றித் - திருந்திய -
ஆற்றுதலினால் திருந்திய.
 

     பைவளர் - பை - நச்சுப்பை. வளர்தல் - இருத்தல்.
 
     வாளரவு - வாள்போன்ற நீள் வடிவும், கொலைத் தொழில் செய்யும்
பண்புமுடையஅரவு; பை...அரவு - அரவுக்கு இயற்கையடை.
 
     மெய்வகைய வழியன்பின் - உண்மைத்தன்மையின் வழிவழியே வரும் அன்பின்
றிறத்தினாற் பெறப்படும்.
 
     மீளாதநிலை - முத்தி; “மீண்டு வாரா வழியருள் புரிபவன்” (திருவா). “மற்றீண்டு
வாராநெறி” (குறள்).                                                8
 
3991. விடநாக மணிந்தபிரான் மெய்த்தொண்டு விளைந்தநிலை
உடனாகு நரசிங்க முனையர்பிரான்
கழலேத்தித்
தடநாக மதஞ்சொரியத் தனஞ்சொரியுங் கலஞ்சேருங்
கடனாகை யதிபத்தர் கடனாகைக் கவினுரைப்பாம்.                   9
 
     (இ-ள்) விடநாகம்....ஏத்தி - விடமுடைய நாகத்தை அணிந்த சிவபெருமானது
மெய்த்தன்மையினையுடைய திருத்தொண்டு வழுவாது விளைந்த நிலையினிலே உடனாய்
நிகழ்ந்த திருவாழ்வுடைய நரசிங்க முனையரையர் பெருமானது கழல்களைப் போற்றி;
தடநாகம்...கவினுரைப்பாம் - பெரியயானைகள் மதநீரினைச் சொரியச் செல்வங்களைப்
பொழியும் மரக்கலங்கள் சேரும் கடல் துறைமுகப்பட்டினமாகிய நாகைப் பதியில் வரும்
அதிபத்த நாயனாரது நியமமாகிய திருத்தொண்டின் அழகினைச் சொல்லப்புகுகின்றோம்.
 
     (வி-ரை) விடநாகமணிந்தபிரான் மெய்த்தொண்டு - முன்பாட்டில்
“பைவளர்வாளரவணிந்தார்” (3990) என்ற கருத்து; முன்பாட்டில் சரித நிறைவு கூறினார்;
இப்பாட்டில் சரிதத்தினை வடித்தெடுத்த சாரங் கூறுகின்றார்; ஈரிடத்தும்
இத்தன்மைபற்றிக் கூறுதல், அருவருக்கத்தக்க விடப்பாம்பினையும் ஆனந்தமளிக்கும்
செம்மையும் உடன்கொண்ட இறைவர்பால் பாம்பினைக்கண்டொதுங்காது செம்மையினை
நோக்கி அடைந்தால் இன்பமுறுதல் உறுதிப் பயனாதல் போல,அடியார்கள் பால்
காணும் உடல் நிலைபற்றிய வேற்றுத் தன்மைகளைக் கண்டு ஒதுங்கமால் செம்மைதரும்
திருவேடத்தினையே நோக்கி அடைதலே உறுதிபயக்கும் என்ற உட்கிடையைக்
கொண்ட குறிப்புடையது.
 
     மெய்த்தொண்டு விளைந்த நிலை உடனாகும் - தொண்டு விளைந்த
நிலையாவது - தொண்டுபுரிதலின் உறைப்பே முதிர்ந்த பண்பு (3889 பார்க்க);
உடனாகும் - தொண்டும் தாமும் ஒன்றாதலும் வேறாதலுமின்றி, சிவாத்துவிதமாகிய
உடனாகும் பெற்றியில் நிகழ்ந்த தொண்டினிலே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் சிறத்தல்;
இஃது இவர் சரித சாரம்.