பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்512


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

68. கோச்செங்கட் சோழ நாயனார் புராணம்
_ _ _ _ _
 

     தொகை
 

“தென்னவனா யுலகாண்ட செங்கணார்க் கடியேன்”

- திருத்தொண்டத் தொகை - (14)
 

வகை
 

மைவைத்த கண்ட னெறியன்றி மற்றோர் நெறிகருதாத்
தெய்வக் குடிச்சோழன் முன்பு சிலத்தியாய்ப் பந்தர்செய்து
சைவத் துருவெய்தி வந்து தரணிநீ டாலயங்கள்
செய்வித் தவன்றிருக் கோச்செங்க ணானெனுஞ் செம்பியனே.
 
    
செம்பொன் னணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகமெய்தி
நம்பன் கழற்கீழிருந்தோன் குலமுத லென்பர்நல்ல
வம்பு மலர்த்தில்லை யீசனைச் சூழ மறைவளர்த்தான்
நிம்ப நறுந்தொங்கற் கோச்செங்க ணானெனு நித்தனையே.
 

- திருத்தொண்டர் திருவந்தாதி - (81- 82)
 

விரி
 

4197.    துலையிற் புறவி னிறையளித்த சோழ ருரிமைச் சோணாட்டில்
அலையிற் றரள மகிலொடுசந் தணிநீர்ப் பொன்னி மணிகொழிக்குங்
குலையிற் பெருகுஞ் சந்திரதீர்த் தத்தின் மருங்கு குளிர்சோலை
நிலையிற் பெருகுந் தருமிடைந்த நெடுந்தண் கான மொன்றுளதால்.   1
 
     புராணம் ;- இனி, நிறுத்த முறையானே, ஆசிரியர், பன்னிரண்டாவது
மன்னியசீர்ச் சருக்கத்துள், நான்காவது கோச்செங்கட்சோழ நாயனாரது புராணங்கூறத்
தொடங்குகின்றார். கோச்செங்கட்சோழரது வரலாறும் பண்பும்கூறும் பகுதி.
 
     தொகை ;- பாண்டிய அரசருமாயிருந்து உலகத்தை ஆண்ட கோச்செங்கட்
சோழருக்கும் நான் அடியேன்.
 
     தென்னவனுமாய் - என்க. சோழாராயிருந்து சோழ நாட்டினை ஆண்டதுடன்
தென்னவனுமாய் என்று இறந்தது தழுவிய எச்சவும்மை விரிக்க. இவர் பாண்டிய
நாட்டையும் தம் அடிப்படுத்தி ஆண்டனர் என்பது சரிதவரலாறு. இதுபற்றியே
வகைநூலுள் “நிம்ப நறுந்தொங்கல்” என்று பாண்டியர்க்குரிய வேப்பமாலை