4226. | வரும்பான் மையினிற் பெரும்பாணர் மலர்த்தாள் வணங்கி வயற்சாலிக் கரும்பார் கழனித் திருநாவ லூரிற் சைவக் கலைமறையோர் அரும்பா நின்ற வணிநிலவும் பணியு மணிந்தா ரருள்பெற்ற சுரும்பார் தொங்கற் சடையனார் பெருமை செப்ப லுறுகின்றோம். 12 |
(இ-ள்) வரும்.......வணங்கி - பான்மைபற்றி வரும் திருநீலகண்டப் பெரும்பாணனாருடைய மலர்போன்ற திருத்தாள்களை வணங்கி, (அத்துணை கொண்டு); வயற்சாலி...மறையோர் - வயல் நெல்லும் கரும்பும் நிறைந்த கழனிகளையுடைய திருநாவலூரில் வந்த சிவாகம நியதியினையுடைய சிவவேதியரும்; அரும்பா நின்ற.....சடையனார் - முளைக்கின்ற அழகிய பிறையினையும் பாம்பினையும் சூடிய சிவபெருமானுடைய திருவருளைப் பெற்றவரும் ஆகிய வண்டுகள் மொய்க்கும் மாலையினை அணிந்த சடையனாரது; பெருமை செப்பலுறுகின்றாம் - பெருமையினைச் சொல்லப் புகுகின்றோம். |
(வி-ரை) ஆசிரியர் தமது மரபுப்படி இதுவரை கூறிவந்த சரிதத்தை முடித்துக்காட்டி இனி வரும் வரலாற்றுக்குத் தோற்றுவாய் செய்கின்றார்; இவ்வாறு வரும் முடித்துக் காட்டுதலும் தொடங்கிக்காட்டுதலும் (உபசம்மாரம் உபக்கிரமம் என்பது வடமொழி வழக்கு) இப்புராணத்துள் இதுவே கடைசியாகும். |
மலர்த்தாள் - உவமைத் தொகை, சாலிக்கரும்பு - உம்மைத் தொகை; சாலியும் கரும்பும்; “நிலத்திற் கணியென்ப நெல்லும் கரும்பும்” என்பது காண்க. |
வயற்சாலி - புன்செய் நிலத்தும் ஆறு ஏரிகளிலும் விளையும் நெல்வகைகளினின்றும் பிரிக்க வயற்சாலி என்றார். |
சடையனார் பெருமை - என்றதனுள் அவரது தேவியாராகிய இசைஞானியாரது பெருமையும் இவர்களது திருமைந்தராய் “மூல மான திருத்தொண்டத் தொகைக்கு முதல்வ ராய், இந்த, ஞால முய்ய எழுந்தருளும் நம்பி களது வரலாறும் அமைந்துகொள்வதனால் திருத்தொண்டத்தொகையினுள்” “என்னவனாம்...அன்பராவாரே” என்ற இரண்டடிகளின் பொருளும் விரிக்கப்பெற்று இச்சருக்கம் நிறைவுறுதல் கண்டுகொள்க. |
பான்மையினில் வரும் - என்று மாற்றிக்கொள்க; பான்மை - ஊழ் - நியதி; இங்குப் பான்மையில் வருதலாவது பாணர் மரபில்வரினும் மேம்பட்டு இறைவரருளும் பிள்ளையாரருளும் பெற்று இப்பிறவியிலே சிவத்தை அணைந்த திறம். பால் - ஊழ்; |
திருநாவலூரில் - சடையனாரது பதி; சைவக்கலை - சிவாகமம். சைவக்கலை மறையோர் - சிவாகமங்களின் வழிவரும் ஒழுக்கமே யன்றி வேறு நெறி பயிலாத நியமமுடைய சிவவேதியர். மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும், வேதியர் குலத்திற் றோன்றி மேம்படு சடையனார்” (149); “எப்போது மினிய பிரா னின்னருளா லதிகரித்து.....விதிமுறைமை வழுவாமே, முப்போது மருச்சிப் பார்” (4160) |
அரும்பாநின்ற....அருள்பெற்ற - “என்னவனா மரனடியே யடைந்திட்ட சடையன்” என்பது முதனூல்; அரும்பா நின்று - அரும்புதல் - முளைத்தல். |
கரும்பார் தொங்கல் - வேதியர் மரபுக்குரிய தாமரை மாலையினைக் குறித்தது. |
பெருமை - வரலாறின்றித் தன்மை குறித்தது. 12 |