இத்தலத்தில்
நடைபெறும் பெரியவிழா கார்த்திகைத் திருவிழாவாகும்.
இது கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நாளைத்
தீர்த்தமாகக் கொண்டு நடைபெறும். சித்திரைமாதத்தில்
சித்திரை நட்சத்திரத்தைத் தீர்த்தமாகக் கொண்டு
பிரமோற்சவமும், பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணமும்
ஆறுநாள் விழாவும், மாசிமகத்தில் வல்லாளன் திருவிழாவும்,
தைமாதம் திருவூடல் விழாவும், ஆனி விழாவும், ஆடியில்
அம்பிகைவிழாவும், பவித்ரோற்சவம், நவராத்தி,
கந்தசஷ்டி, திருவெம்பாவை உற்சவம், திருவாதிரை முதலியனவும்
சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றன.
அயனும் மாலும் அகந்தைகொண்டு,
அடிமுடிதேட அன்னமும் வராகமுமாக மாறித் தேடி அயற்சி
அடைந்தாராக, அக்கினி வடிவாய் நின்று அருள்செய்தவர்
அண்ணாமலைநாதர். முருகன் தாருகனை வதஞ்செய்து வணங்கிச்சென்ற
தலம் பலவற்றுள் இதுவும் ஒன்று. சம்பந்தர், அப்பர்,
மணிவாசகர் இம் மூவராலும் பாடல் பெற்றது. சுந்தரர்
பாடியதாகப் பாடல் இல்லையாயினும் சேக்கிழார்
வரலாற்றால் ஊகிக்கவேண்டியுள்ளது. நக்கீரர்,
பரணர், கபிலர், பட்டினத்தார் ஆகிய இந்நால்வரும்
அண்ணாமலையைப் பற்றிப்பாடிய பாக்கள் பதினொராந்திருமுறையில்
உள்ளன. வச்சிராங்கதன் என்னும் பாண்டியன் தினமும்
வலம்வந்து திருப்பணி பல செய்துள்ளான். வல்லாளமகாராஜன்
அண்ணாமலையை ஆண்டுவந்தான். அருணகிரிநாதர்
கோபுரத்திலிருந்து இறக்க எண்ணி வீழ்ந்தபோது
முருகன் தோன்றி அருள்செய்தான். குகைநமச்சிவாயர்,
குருநமச்சிவாயர் முதலானவர்கள் சித்தி பல செய்தனர்.
கோயிலின் வடகிழக்குமூலையில்
ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. கிழக்குப்பக்கத்தில்
நுழையும்போதுள்ள உட்கோபுரம் வல்லாளமகாராஜன்
கோபுரம் என்று வழங்கப்படுகிறது. வல்லாள கோபுரத்தின்
வடகிழக்கு மூலையில் சக்திவிலாஸமும் உள்ளது. மேற்கு
நோக்கி உட்சென்றால் கிளிக்கோபுரம் காணலாம்.
தலவிருட்சத்திற்கு மேற்கே கல்யாணமண்டபம் உள்ளது.
கல்வெட்டு:
பதிவுசெய்யப்பெற்ற
மொத்தக் கல்வெட்டுக்கள் 119. இவைகளில் பெரும்பாலன
சோழர்காலத்தன. திருவிளக்கேற்றல், திருமஞ்சனம்,
திருநந்தனவனம், திருவமுது, திருவெழுச்சி, அடியார்க்கு
அமுதளித்தல் முதலிய பல அறங்களுக்காக நிலம்,
பொன், கால்நடை முதலியனவற்றை அளித்தமையை அறிவிக்கின்றன.
பாண்டியர்,
|