இடப் பாகத்துச் செவி
என்பது குறிக்கப்பெறுகின்றது. கருணைக்கேற்றது, தாய்தழீஇய
இடப்பக்க மாதலின், அதனை முற்கூறினார். "தோடு
கூற்று பித்தா மூன்றும் பீடுடைத்தேசிகன் பேரருள்
ஆகும்" என்பதால் இது ஞானதேசிகனது திருவருட்டிறத்தை
விளக்குவதாகும். சொரூபசிவம் மூவகை ஆன்மாக்களுக்கும்
மூவகையால் அநுக்கிரகித்து மும்மலங்களையும்
போக்கி அருளாரமுதத்தை உண்பித்தருளும் முறையில்,
சகலான்மாக்களுக்குப் படர்க்கையில் தோன்றிப்
புரியும் குருவருளைக் குறிப்பதாகுமென்று "குரு
அருளும்" (அகத்தியர் தேவாரத் திரட்டு) என்ற
பாடலும் குறிக்கிறது.
மூன்று வயதுக் குழந்தையாகிய
ஞானசம்பந்தப் பிள்ளையார் தீவிரதர அன்புகொண்டு
சன்மார்க்க நெறியாகிய நாயக நாயகித் தன்மையில்
எடுத்த எடுப்பிலேயே ஈடுபடுகின்றார். உமையொரு பாகனாக
ஒரு பெண்ணோடு இருந்த பயில்வால் என்னுள்ளங் கவர்கின்றார்
என நயந்தோன்றக் கூறியவாறு. விடையேறி - தாம் கண்ட
காட்சி இடபாரூடராதலின் அதனைக் குறித்தபடி. தூவெண்மதி
- தூய்மையான வெண்ணிறம் பொருந்திய மதி. மதிக்குத்
தூய்மை களங்கமின்மை, இருள் ஒளியைச் சாராதவாறுபோலக்
களங்கம் இறைவனையும், அவனருள் பெற்றாரையும்
சாராது. தூய்மை மனத்திலும் வெண்மைபுறத்திலும் நிகழ்வது
ஆதலின், இங்கே குறிப்பிடும் மதி நாம் காணும் சந்திரன்
போன்று பிராகிருத சந்திரன் அல்லன் என்பது தெளியத்தக்கது.
அன்றியும் ஒரு கலைப் பிறையாதலின் களங்கத்திற்கு
இடமில்லை என்பதுமாம். இறைவன் சுடலைப் பொடி
பூசுதல்: சர்வ சங்கார காலத்து எல்லாவுலகமும் தத்தங்காரணத்துள்
முறையே ஒடுங்க - காரணங்கள் யாவும் இறுதியாக இறைவனிடம்
ஒடுக்கப் பெறும்போது நிகழ்வது. மகாசங்காரமாவது, நிவர்த்தியாதி
பஞ்ச கலைகளிலும் அடங்கிய எல்லாப் புவனங்களையும்
சங்கரிக்கின்ற நிலை. அப்போதுதான் எல்லாம்
சுடலைக் காடாகும்.
உள்ளங்கவர்தலாவது
அவனையன்றி உளங்கள் அறியாவாறு ஆட்கொள்ளுதல். ஏடு
- இதழ். மலரான் - பிரமன். பிரமன் வழிபாடு செய்த
தலமாதலின் இறைவற்குப் பிரமபுரீசர் என்பதும் தலத்திற்குப்
பிரமபுரம் என்பதும் பெயராயிற்று. பிரமாபுரம்
எனவே பிரமன் வழிபட்ட தலம் என்பது விளங்குதலின்
மலரான் என்பது பிரமனைக் குறியாது என்றும், இந்நாயனாரே
முற்காலத்து ஏடுடைய மலரால் பூசித்த காரணம் பற்றி
இங்ஙனம் கூறினார் என்றும் சதாசிவச் செட்டியாரவர்கள்
கருதினார்கள். பீடு - பெருமை. மேவிய - தாமே
விரும்பி எழுந்தருளியுள்ள. இறைவன் நித்யசுதந்திரன்
ஆதலின்
|