190. மூரன்முறு வல்வெண்ணகை 
  யுடையாளொரு பாகம் 
  சாரன்மதி யதனோடுடன் 
  சலவஞ்சடை வைத்த 
  வீரன்மலி யழகார்பொழில் 
  மிடையுந்திரு நின்றி 
  யூரன்கழ லல்லாதென 
  துள்ளம்முண ராதே. 6 
  191. பற்றியொரு தலைகையினி 
  லேந்திப்பலி தேரும் 
  பெற்றியது வாகித்திரி 
  தேவர்பெரு மானார் 
  சுற்றியொரு வேங்கையத 
  ளோடும்பிறை சூடும் 
  நெற்றியொரு கண்ணார்நின்றி 
  யூரின்னிலை யாரே. 7 
 
__________________________________________________ 
6. பொ-ரை: புன்முறுவலைத் தரும்
வெண்மையான பற்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக்
கொண்டு, சடைமுடியில் சார்ந்துள்ள பிறைமதியோடு
கங்கையை வைத்துள்ள வீரனும் அழகு மலிந்த
பொழில்கள் செறிந்த திருநின்றியூரில் எழுந்தருளியவனுமாகிய
சிவபிரான் திருவடிகளை அல்லாது எனது உள்ளம் வேறு ஒன்றையும்
உணராது. 
கு-ரை: மூரல் முறுவல் - மிகச் சிறிய
புன்சிரிப்பு, சலவம் - கங்கை. கழலைப்பற்றிய
உள்ளத்திற்கு, வேறொன்றையும் உணர முடியாமையானும்
உணர்ந்து ஆகவேண்டுவது இன்மையானும் உள்ளம் உணராது
என்றார். 
7. பொ-ரை: பிரமனது தலைகளில் ஒன்றைப்
பறித்து அதனைக் கையினில் ஏந்திப் பலிகேட்கும்
இயல்பினராய்த் திரிகின்ற தேவர் தலைவரும் புலித்தோலை
இடையில் சுற்றியிருப்பதோடு முடியில் பிறைமதியைச்
சூடியவரும், நெற்றியில் ஒரு கண்ணை உடையவரும்
ஆகிய பெருமானார் திருநின்றியூரின்கண் நிலையாக
எழுந்தருளியுள்ளார். 
 |