பக்கம் எண் :

444திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


22. திருமறைக்காடு

பதிக வரலாறு:

பிள்ளையார் திருநாவுக்கரசு சுவாமிகளோடு திருவாய்மூரைத் தரிசித்துக்கொண்டு மீண்டும் திருமறைக்காட்டிற்கு எழுந்தருளினார்கள். அங்கே ‘கண்பயிலும் நெற்றியார்தம் கழலிணை பணிந்து போற்றிச் சிலைதனை நடுவிடை என்னும் பண்பயில் பதிகம் பாடிப் பரவி அங்கு எழுந்தருளியிருந்தார்கள்.

திருவிராகம்

பண்: நட்டபாடை

பதிக எண்: 22

திருச்சிற்றம்பலம்

228. சிலைதனை நடுவிடை நிறுவியொர்

சினமலி யரவது கொடுதிவி

தலமலி சுரரசு ரர்களொலி

சலசல கடல்கடை வுழிமிகு

கொலைமலி விடமெழ வவருடல்

குலைதர வதுநுகர் பவனெழில்

மலைமலி மதில்புடை தழுவிய

மறைவன மமர்தரு பரமனே. 1

__________________________________________________

1. பொ-ரை: மந்தரமலையை மத்தாக நடுவே நிறுத்தி, சினம் மிக்க ஒப்பற்ற வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு, விண்ணுலகில் வாழும் தேவர்களும் அசுரர்களும் சலசல என்னும் ஒலி தோன்றுமாறு திருப்பாற்கடலைக் கடைந்தகாலத்துக் கொல்லும் தன்மை வாய்ந்த ஆலகால விடம் அக்கடலில் தோன்ற, அதனால் தேவாசுரர்கள் அஞ்சி நடுங்கித் தன்னை நோக்கி ஓலமிட்ட அளவில் அந்நஞ்சை உண்டு அவர்களைக் காத்தருளியவன் அழகிய மலை போன்ற மதில்களால் சூழப்பட்ட மறைவனத்தில் எழுந்தருளிய பரமன் ஆவான்.

கு-ரை: இது விடத்தைக்கண்டு விண்ணவர் எல்லாரும் நடுநடுங்க, அதனை நுகர்பவன் மறைக்காட்டுறையும் பரமன் என்கின்றது.