85. திருநல்லம்
பதிக வரலாறு:
வைகல் மாடக்கோயிலை வணங்கிப்போந்த
பிள்ளையார் திருநல்லத்தை நணுகினார்கள். அங்கு
எழுந்தருளியுள்ள நீடு மாமணியின் சேவடிகளை வணங்கி,
இனிய தமிழாகிய ‘கல்லால் நிழன்மேய’ என்னும் பதிகத்தை
அருளிச்செய்தார்.
பண் : குறிஞ்சி
பதிக எண்: 85
திருச்சிற்றம்பலம்
915. கல்லா னிழன்மேய கறைசேர் கண்டாவென்
றெல்லா மொழியாலு மிமையோர் தொழுதேத்த
வில்லா லரண்மூன்றும் வெந்து விழவெய்த
நல்லா னமையாள்வா னல்ல நகரானே. 1
916. தக்கன் பெருவேள்வி தன்னி லமரரைத்
துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக்
கொக்கின் னிறகோடு குளிர்வெண் பிறைசூடும்
நக்கன் னமையாள்வா னல்ல நகரானே. 2
____________________________________________________
1. பொ-ரை: இமையவர்கள் கல்லால மர
நிழலில் எழுந்தருளிய கறை பொருந்திய கண்டத்தை
உடையவனே என்று தமக்குத் தெரிந்த அனைத்து
மொழிகளாலும் தோத்திரம் செய்து தொழுது ஏத்த,
மேரு வில்லால அசுரர்தம் மூன்று அரண்களும் வெந்து
விழுமாறு செய்தருளிய பெரியவனாகிய சிவபிரான் நம்மையாட்கொள்ளுதற்
பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.
கு-ரை: உபதேச குருமூர்த்தியாயிருந்த
நீலகண்டா என்று தேவர்கள் தோத்திரிக்கத் திரிபுரம்
எரித்த பெருமான் நமையாட் கொள்ளுவதற்காகத் திருநல்லம்
என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருக்கின்றார்
என்கின்றது. கறை - விஷம். எல்லா மொழியாலும் -
தமக்குத் தெரிந்த மொழிகள் எல்லாவற்றாலும்.
2. பொ-ரை: தன்னை இகழ்ந்து தக்கன் செய்த
பெரிய வேள்விக்குச் சென்ற அமரர்களை, அவ்வேள்விக்
களத்திலேயே பலவகை
|