93. திருமுதுகுன்றம்
பதிக வரலாறு:
12-ஆம் பதிகம் பார்க்க.
திருவிருக்குக்குறள்
பண்: குறிஞ்சி
பதிக எண்:93
திருச்சிற்றம்பலம்
1003. நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை
நன்று மேத்துவீர்க், கென்று மின்பமே. 1
1004. அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர்
நித்த மேத்துவீர்க், குய்த்தல் செல்வமே. 2
1005. ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர், வைய முமதாமே. 3
___________________________________________________
1. பொ-ரை: இன்றே திருமுதுகுன்றம் சென்று,
அங்குள்ள இறைவரை மலரால் அருச்சித்து நின்று நல்லமுறையில்
துதிப்பீராயின் உமக்கு எக்காலத்தும் இன்பம் உளதாம்.
கு-ரை: இன்றைக்கே முதுகுன்றை மலர்தூவி
ஏத்தும் உங்களுக்கு என்றைக்கும் இன்பமாம் என்கின்றது.
ஒருநாள் வழிபாட்டிற்கு நிலைத்த இன்பம் வரும் என்கின்றது.
2. பொ-ரை: நீர் திருமுதுகுன்றத்துத்
தலைவனாய் விளங்கும் இறைவன்மீது பக்தி செலுத்தி
நாள்தோறும் வழிபட்டு வருவீராயின் உமக்குச் செல்வம்
பெருகும்.
கு-ரை: உய்த்தல் செல்வமே - பொருந்துதல்
செல்வமேயாகும் என்றது பொருள் பெருகும் என்பதாம்.
3. பொ-ரை: திருமுதுகுன்றத்துள்
விளங்கும் தலைவனாகிய சிவபிரானை நீர் பலவகையான
பொய்கள் இன்றி மெய்மையோடு நின்று. கைகளைக் கூப்பி
வழிபடுவீர்களாயின் உலகம் உம்முடையதாகும்.
|