| 
 
1070. பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக் கொடிகளோடுந் நாள்விழமல்கு குற்றாலம் கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய் அடிகண்மேய நன்னகர்போலும் மடியீர்காள். 2 1071. செல்வமல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக் கொல்லைமுல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம் வில்லினொல்க மும்மதிலெய்து வினைபோக நல்கும்நம்பா னன்னகர்போலுந் நமரங்காள். 3 ___________________________________________________ 2. பொ-ரை: அடியவர்களே! திருநீறு
பூசித் தொண்டர்கள் பின்னே வரவும், புகழ்
சிறக்கவும், கொடிகளை ஏந்தியவர்களாய்
அன்பர்கள் முன்னால் செல்லவும், நாள்தோறும்
விழாக்கள் நிகழும் நகர் குற்றாலமாகும். இவ்வூர்
மணம் கமழும் கொன்றை வில்வமாலை ஆகியவற்றை
விரும்பும் அடிகளாகிய சிவபிரானார் எழுந்தருளிய
நன்னகராகும். கு-ரை: நீறணிந்து தொண்டர்கள்
பின்செல்ல, நாள்விழா நிறைந்த குற்றாலம்,
கொன்றையையும் கூவிளத்தையும் விரும்பிய அடிகள்
நகர் என்கின்றது. பொடி - விபூதி 3. பொ-ரை: நம்மவர்களே! செல்வம்
நிறைந்ததும், செண்பகம் வேங்கை ஆகிய மரங்களில்
தாவிப் படர்ந்து முல்லைக் கொடி அரும்புகளை
ஈனுவதும் ஆகிய குற்றாலம், வில்லின் நாண் அசைய
அதன்கண் தொடுத்த கணையை விடுத்து
மும்மதில்களையும் எய்து அழித்துத் தன்னை வழிபடும்
அன்பர்களின் வினை மாசுகள் தீர அருள் புரியும்
சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும். |