பக்கம் எண் :

25

மெய்கண்டாரை வழங்கிய பாடல்:

     “கண்காட்டும் நுதலானும்” என்ற திருவெண்காட்டுத் திருப்பதிகம்
இத்திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அதில் இரண்டாம் பாடல்.

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளம்நினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே
                                (தி. 2 ப. 48 பா. 2)

என்பது. இத்திருப்பாடல்தான் மெய்கண்டார் தோற்றத்திற்குக்
காரணமாயிருந்தது. இது இத்திருமுறையில் இருப்பது சிறப்பிற்குரியது.
பெண்ணாகடத்தைச் சேர்ந்த அச்சுதகளப்பாளர் தமக்கு
மகப்பேறின்மையால் தம் குலகுருவாகிய திருத்துறையூர் அருணந்தி
சிவாசாரியரிடம் வேண்ட, அவர் திருமுறையில் கயிறு சார்த்திப்
பார்த்தபோது இப்பாடல் கிடைத்தது. அதன் படியே திருவெண்காடு
அடைந்து முக்குள நீராடி மெய்கண்டாரைத் தவப்பேறாகப் பெற்றார்.

வேளாளர்களும் அந்தணர்களும்:

     ஆக்கூர்த் திருப்பதிகத்தில் அங்கு வாழ்ந்த வேளாளர்களும்
அந்தணர்களும் வள்ளல்களாக விளங்கினர் என்று குறிக்கிறார்.
ஒவ்வொரு பாடலிலும் தொல்கோயில் என்று குறிப்பதால் அக்கோயில்
மிகப்பழமையானது என்பது புலனாகிறது. இப்பதிகத்தின் மூன்றாவது
பாடலில்,

“வேளாளர் என்றவர்கள் வள்ளன்மையால் மிக்கிருக்கும்
 தாளாளர் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே”

                              (தி. 2 ப. 42 பா. 3)

என்று குறிக்கிறார். ஒன்பதாவது பாடலில்,

“இன்மையால் சென்றிரந்தார்க்கு இல்லைஎன்னாது ஈந்துவக்கும்
 தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே”

                              (தி. 2 ப. 42 பா. 9)

என்று குறிக்கின்றார். ஈந்துவக்கும் ‘தன்மையார்’ என்று சுட்டுவது