பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)105. திருக்கலிக்காமூர்1207

3925. தூவிய நீர்மல ரேந்திவையத்
       தவர்க டொழுதேத்தக்
காவியி னேர்விழி மாதரென்றுங்
     கவினார் கலிக்காமூர்
மேவிய வீசனை யெம்பிரானை
     விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கல னாதிமூர்த்தி
     யமரர் பெருமானே.                   3


பௌவநீர் நீந்தும் ஏழையேற் கென்னுடன் பிறந்த ஐவரும் பகையே” (தி.9
திருவிசைப்பா. 81.)

     3. பொ-ரை: அபிடேகம் செய்யும் பொருட்டுத் தூய நீரையும்,
பூசிக்கும் பொருட்டு மலர்களையும் ஏந்தி வந்து இவ்வுலகத்தவர்களும்,
நீலோற்பல மலர்போன்ற கண்களை உடைய பெண்களும் வணங்கிப்
போற்ற, என்றும்அழகுடன் திகழும் திருக்கலிக்காமூர் என்னும் திருத்தலத்தில்
விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, எம் தலைவனான சிவபெருமானை விரும்பி
வழிபட்டால், ஆதிமூர்த்தியும் தேவர்கட்கெல்லாம் தலைவனுமான
அப்பெருமான் உயிரினுள் நீங்கலாகாத தன்மையோடு விளங்குவான்.

     கு-ரை: தூவிய நீர்மலரை ஏந்திச் சொரிந்து அபிடேகிக்கும்
பொருட்டு நீரையும் சொரிந்து, பூசிக்கும் பொருட்டு மலரையும் முறையே
ஏந்தி வந்து வையத்தவர்கள் தொழுது ஏத்தவும். காவியின் நேர்விழி மாதர் -
நீலோற்பல மலரையொத்த விழிகளையுடைய மாதர்கள், தொழுதேத்தவும்
(அதனால் என்றும்), கவின் ஆர் - அழகு நிறைந்த, கலிக்காமூர். தூவிய (நீர்
மலரேந்தி) சுருங்கச் சொல்லல் என்னும் அழகு. அது செய்யிய என்னும்
வாய்பாட்டு வினையெச்சம். வையத்தவர் - பூமியிலுள்ளவர்களாகிய
(ஆடவரும்) காவியின் நேர்விழி மாதரும் தொழுதேத்தக் கவினார் கலிக்
காமூர் என்க. மாதர் என, பின்வருதலால் வையத்தவர் என்பது பெண்ணொழி
மிகு சொல். தொழுதேத்த இடை நிலைத் தீவகம். ஆதி மூர்த்தியாகிய அவ்
அமரர் பெருமான் உயிருள் நீங்கலனாம் தன்மை விளங்கத் தோன்றுவன்
என்பது ஈற்றடியின் பொருள்.