| பதிக வரலாறு:             சிரபுரத்து 
        அந்தணர் மீண்டு சென்ற பின்பு, கவுணியப் பிள்ளையார், ஓங்கிய திருநாவுக்கரசரோடும் விரவிப் பெருகிய நண்புகூர மேவி இனிது
 உறையும் நாளில் பரவிப் பணிந்து சாத்திய தமிழ்த் தொடைமாலை இத்
 திருப்பதிகம்.
 ஈரடி 
        பண்: 
        பழம்பஞ்சுரம்
 
         
          | ப.தொ.எண்: 
            369 |  | பதிகஎண்: 
            111 |   திருச்சிற்றம்பலம் 
         
          | 3990. | வேலினேர்தரு 
            கண்ணினாளுமை |   
          |  | பங்கனங்கணன் 
            மிழலைமாநகர் ஆலநீழலின் மேவினானடிக்
 கன்பர்துன் பிலரே.                    
            1
 |  
         
          | 3991. | விளங்குநான்மறை 
            வல்லவேதியர் |   
          |  | மல்குசீர்வளர் 
            மிழலையானடி உளங்கொள்வார்தமை யுளங்கொள்வார்வினை
 யொல்லை யாசறுமே.                   2
 |  
       1. 
        பொ-ரை: வேல் போன்று கூர்மையும், ஒளியுமுடைய கண்களை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவர். அழகிய
 கண்களையுடைய சிவபெருமான். அவர் திருவீழிமிழலை என்னும் மாநகரில்
 வீற்றிருந்தருளுகின்றார். ஆலமரநிழல் கீழிருந்து அறம்உரைத்தவர்.
 அப்பெருமானின் திருவடிகளை அன்புடன் வணங்குபவர்கட்குத் துன்பம்
 இல்லை.
       கு-ரை: 
        வேலின் நேர்தரு - வேலை ஒத்த.       2. 
        பொ-ரை: நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்ல அந்தணர்கள் வசிக்கின்ற, புகழ்மிக்க திருவீழிமிழலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின்
 திருவடிகளை உள்ளத்தால் தியானிப்பவர்கள் சிவனடியார்கள்,
 அவ்வடியார்களை வழிபடும் அன்பர்களின் வினையான குற்றம் விரைவில்
 நீங்கும்.
 |