பக்கம் எண் :

1362திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

4130. குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த
       கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான்
     கருத்துடை ஞானசம்பந்தன்
உற்றசெந் தமிழார் மலையீ ரைந்து
     முரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார்
     தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.      11

திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: குற்றமில்லாத குடிமக்கள் வாழ்கின்ற ஒலிக்கின்ற கடல்
சூழ்ந்த திருக்கோணமலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை, கற்றுணர்
ஞானமும், கேள்வி ஞானமும் உடைய சீகாழி வாழ் மக்களின் தலைவரான
சிவஞானக் கருத்துடைய ஞானசம்பந்தர் செந்தமிழில் அருளிய இப்பதிகத்தை
உரைப்பவர்களும் கேட்பவர்களும் உயர்ந்தோர் ஆவர். அவர்களுடைய
சுற்றத்தாரும் எல்லா நலன்களும் பெற்றுத் தொல்வினையிலிருந்து நீங்கப்
பெறுவர். சிவலோகத்தில் பொலிவுடன் விளங்குவர்.

     கு-ரை: உயர்ந்தோர் சுற்றமும் ஆக. சுற்றம் - சூழ இருப்பவர்.

திருஞானசம்பந்தர் புராணம்

அந்நகரில் அமர்ந்தங்கண் இனிது மேவி
      ஆழிபுடை சூழ்ந் தொலிக்கும் ஈழந்தன்னில்
மன்னுதிருக் கோணமலை மகிழ்ந்த செங்கண்
      மழவிடையார் தமைப்போற்றி வணங்கிப் பாடிச்
சென்னிமதி புனைமாட மாதோட் டத்தில்
      திருக்கேதீச் சரத்தண்ணல் செய்ய பாதம்
உன்னிமிகப் பணிந்தேத்தி அன்ப ரோடும்
      உலவாத கிழிபெற்றார் உவகை யுற்றார்.

                                -சேக்கிழார்.