பக்கம் எண் :

160ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

கும்பகோணம் அருகே உள்ள நதான் கோவில் என்னும் திருமால் தலம்
நந்திவர்மனால் எடுப்பிக்கப்பட்டு நந்திபுர விண்ணகரம் என்று
அழைக்கப்பட்டது. “நந்தி பணிசெய்த நகர் நந்திபுர விண்ணகரம்” என்று
திருமங்கை ஆழ்வாரும் மங்களா சாசனம் செய்து அருளினர். தில்லைத்
திருச்சித்திர கூடத்தில் பல்லவ மன்னன் திருமாலை எழுந்தருள்வித்தான்.

     “பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து
     புடைமன்னவன் பல்லவர் கோன் பணிந்த
     செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த
     தில்லைத் திருச் சித்திர கூடம்”

என்று திருமங்கையாழ்வாரால் அருளப்பட்டது. எனவே தில்லைத்
திருச்சித்திர கூடத்தில் திருமாலை எழுந்தருள்வித்தவன் நந்திவர்மனே
(730-795) என்னும் செய்தி உறுதிப்படுகிறது.

     “தில்லை நகர்த் திருச்சித்திர கூடந் தன்னுள்
     அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த......”

என்று குலசேகர ஆழ்வாரும் தில்லைத் திருமால் மீது பாடியிருப்பதும்
கணிக்கத்தக்கது. எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தில்லையில்
திருமாலின் திருமேனி வைக்கப்பட்டது என்னும் இச்செய்தி மிக
முக்கியமானது.

     திருமங்கையாழ்வாருக்கும், குலசேகர ஆழ்வாருக்கும் காலத்தால்
பிற்பட்டவர் மாணிக்கவாசகர். தில்லையில் திருமாலின் திருக்கோலத்தைத்
திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் குறிப்பதும் நம் ஆய்வுக்குத் துணை
நிற்கும். “வரங்கிடந்தான் தில்லையம்பல முன்றலில் அம் மாயவனே” என்பது
மாணிக்கவாசகரின் அருள் வாக்கு.

வரகுணன்-சிவபக்தன்:

     863 இல் முடிசூடிய வரகுணன் சோழநாட்டை வென்றான். வரகுணனின்
கல்வெட்டுகள் திருநெய்த்தானம், திருக்கோடிக்காவல், திருக்காட்டுப்பள்ளி,
கும்பகோணம், ஆடுதுறை, திருவிசலூர் ஆகிய ஊர்களில் காணப்படுகின்றன.
கி.பி. 885இல் நடந்த திருப்புறம்பியப் போரில் வரகுணன் தோல்வி
அடைந்தான். பல்லவரும், சோழரும் வெற்றி அடைந்தனர். வரகுணன்
இராச்சிய பாரத்தைத்