பக்கம் எண் :

518திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

 17. திருவிசயமங்கை

பதிக வரலாறு:

     மூவுலகும் உய்ய நஞ்சம் உண்ட மூர்த்தியார் மேவிய
திருவிசயமங்கையில் எய்தி, அத்தனியாலயம் சூழ்ந்து தாழ்ந்து, வணங்கி,
அத்தலத்தில் வழிபட்ட கோதனத்தைச் சிறப்பித்து ஏத்திய செந்தமிழ்மாலை
இத்திருப்பதிகம்.

பண்: காந்தார பஞ்சமம்

ப. தொ. எண்: 275   பதிக எண்: 17

திருச்சிற்றம்பலம்

2976. மருவமர் குழலுமை பங்கர் வார்சடை
  அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாம்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி விசய மங்கையே.           1

2977. கீதமுன் னிசைதரக் கிளரும் வீணையர்
  பூதமுன் னியல்புடைப் புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே.          2


     1. பொ-ரை: நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை
ஒருபாகத்தில் கொண்ட, நீண்ட சடையில் பாம்பணிந்த சிவபெருமான்
எழுந்தருளியுள்ள கோயில், குரவம், சுரபுன்னை, கோங்கு, வேங்கை ஆகிய
மரங்கள் நிறைந்து விளங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவிசயமங்கை
ஆகும்.

     கு-ரை: மரு - வாசனை. தெய்வக் கற்புடைய அம்பிகையின் கூந்தல்
இயற்கை மணம் கமழ்வது ஆதலால் “மரு அமர் குழல் உமை” என்றார்.
வார்சடை ... ... எம் அடிகள் - நெடிய சடையின் கண்ணே பாம்பையும்
விரும்பத்தக்க கொன்றை மாலையையும் உடைய எம் அடிகள். குரவும்
ஏனைய மரங்களும் கலந்தபொழில்.

     2. பொ-ரை: கீதங்களை முன்னே இசைக்க விளங்கும் வீணையினை
உடையவரும், பூதகணங்கள் சூழ விளங்கும் புனிதரான