பக்கம் எண் :

598திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3110. பணங்கொள்நா கம்அரைக் கார்ப்பது பல்பலி
  உணங்கலோ டுண்கலன் உறைவது காட்டிடைக்
கணங்கள்கூ டித்தொழு தேத்துகாட் டுப்பள்ளி
நிணங்கொள்சூ லப்படை நிமலர்தம் நீர்மையே.   4

3111. வரையுலாம் சந்தொடு வந்திழி காவிரிக்
  கரையுலாம் இடுமணல் சூழ்ந்தகாட் டுப்பள்ளித்
திரையுலாம் கங்கையும் திங்களும் சூடியங்
கரையுலாங் கோவணத் தடிகள்வே டங்களே.     5


     4. பொ-ரை: சிவபெருமான் இடுப்பிலே கச்சாக அணிந்திருப்பது
படமெடுத்தாடும் நாகமாகும். பல இடங்களில் பிச்சையேற்று வந்த உணவை
உண்ணும் பாத்திரம், உலர்ந்த பிரமகபாலமாகும். வசிப்பது சுடுகாடாகும்.
அத்தகைய பெருமானார் சிவகணத்தோர் தொழுது அருளுகின்றார்.
கொழுப்பினைக் கொண்ட சூலப்படையை ஏந்திய நிமலராய் விளங்கும்
இயல்புடையவர்.

     கு-ரை: அரைக்கு ஆர்ப்பது - இடுப்பிற் கட்டிக்கொள்வது; நாகம். பல
இடங்களில் ஏற்றுவந்த பிச்சைச் சோற்றையுண்ணும் பாத்திரம். உணங்கல்
ஓடு-உலர்ந்த மண்டையோடு. தங்குவது சுடுகாட்டில். இது திருக்காட்டுப்பள்ளி
நிமலர்தம் நீர்மை யாகும். எனினும், அன்னன் என்று அகலற்க. “பாரிடம்
சூழ் வரத்தான் பலிகொண்டும் தன்பாதமலர் சேர் அடியார்க்குப் பெருவாழ்வு
அளிப்பன்” (திருக்கருவைக் கலித்துறையந்தாதி) “கோயில் சுடுகாடு.......
ஆயிடினும் காயில் உலகனைத்தும் கற்பொடிகாண்”, எம்பெருமான் ஏது
உடுத்து அங்கு ஏது அமுது செய்திடினும் தன் பெருமை தானறியாத்
தன்மையன்” என்பது கொண்டு தேறி அவனைச் சரண்புக்குப் பெரும்பயன்
எய்துக என்பது பாட்டிடை வைத்த குறிப்பு.

     5. பொ-ரை: மலையில் செழித்த சந்தனமரங்களை நீரோட்டத்தால்
உந்தித் தள்ளிக் கரையினில் சேர்க்கும் காவிரியின் மணல் சூழ்ந்த
திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தின் இறைவர் அலைவீசும்
கங்கையையும், சந்திரனையும் சடைமுடியிலே சூடி, இடுக்கிலே கோவண
ஆடையுடன் காட்சிதரும் கோலமுடையவர்.

     கு-ரை: வரை உலாம் - மலையிற் செழித்த. சத்து - சந்தன மரங்கள்.
உலாம் - உலாவும்: இங்குச் செழித்த என்னும் பொருட்டு.