பக்கம் எண் :

668திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3224. கல்லாநெஞ்சின், நில்லானீசன்
  சொல்லாதாரோ, டல்லோநாமே.     3

3225. கூற்றுதைத்த, நீற்றினானைப்
  போற்றுவார்கள், தோற்றினாரே.     4

3226. காட்டுளாடும், பாட்டுளானை
  நாட்டுளாரும், தேட்டுளாரே.        5


     பெருமானை அன்றி, பிறிதொரு தெய்வமும் முக்திச் செல்வம் தருவதாக
நாம் கருதோம்.

     கு-ரை: நன்று இலோம் - நன்மை தரும் பொருளாகக் கொள்ளுதல்
இலோம். இல்லோம் - கொள்ளோம்.

     3. பொ-ரை: இறைவனை இடைவிடாது தியானிக்காதவர் உள்ளத்தில்
அவன் நில்லான். ஆதலால் அப்பெருமானின் பெருமைகளைப்
போற்றாதவர்களோடு நாங்கள் சேரோம்.

     கு-ரை: கல்லாநெஞ்சில் - இடைவிடாது தியானிக்காத உள்ளத்தில்.
நில்லான் ஆதலால் திருநாமம் அஞ்செழுத்தும் செப்புதல், அவர் திறம்
ஒருதரமேனும் சொல்லாதவரோடு நாங்களும் சேரோம் என்பது
பின்னிரண்டடிகளின் கருத்து. 'இன்னீரமிர்தன்னவள் கண்ணிணை மாரிகற்ப'
என்ற சிந்தாமணியின் உரையால் இப்பொருள் கொள்க.

     4. பொ-ரை: மார்க்கண்டடேயரின் உயிரைக் கவரவந்த கூற்றுவனைத்
தன் திருப்பாதத்தால் உதைத்த, தன் திருமேனியில் திருவெண்ணீற்றினைப்
பூசியுள்ள சிவபெருமானைப் போற்றுபவர்களே பிறந்ததன் பயனை அடைவர்.

     கு-ரை: தோற்றினார் - பிறந்த பயன் எய்துவர். "தோன்றிற் புகழொடு
தோன்றுக" - (திருக்குறள்) என்பதனோடு ஒப்பிடுக.

     5. பொ-ரை: சுடுகாட்டில் நடனம் ஆடும் இறைவன் அடியாரேத்தும்
பாமாலையை உடையவன். சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்று தம்
உள்ளத்தில் நிலைநிறுத்தியவர்களே பேரின்பச் செல்வத்தில் திளைப்பவர்கள்.