பக்கம் எண் :

762திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

55. திருவான்மியூர்

பதிக வரலாறு:

     சிரபுரத்துப் புரவலனார், அரவநெடுந் திரைவேலை அணிவான்மியூரில்
சிலநாள் இனிது இருந்தபோது, அங்கு வீற்றிருக்கும் உலகாளுடையாரைப்
போற்றிய பல அருந்தமிழிசைப் பதிகங்களுள் ஒன்று இது.

பண்: காந்தார பஞ்சமம்

ப.தொ.எண்:313   பதிக எண்: 55

திருச்சிற்றம்பலம்

3384. விரையார் கொன்றையினாய் விடமுண்ட
       மிடற்றினனே
உரையார் பல்புகழா யுமைநங்கையொர்
     பங்குடையாய்
திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி
     யூருறையும்
அரையா வுன்னையல்லா லடையாதென
     தாதரவே.                         1


     1. பொ-ரை: நறுமணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவனே.
விடமுண்ட கறுத்த கண்டத்தினனே. அடியவர்களால் பலவாகப்
புகழ்ந்துரைக்கப் படுபவனே. உமாதேவியைத் தன்திரு மேனியில் ஒரு
பாகமாகக் கொண்டவனே. அலைவீசும் அழகிய கடல் சூழ்ந்த
திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் அரசனே! உன்னைத்தவிர என்மனம்
ஆதரவாக வேறெதையும் அடையாது.

     கு-ரை: விரை - வாசனை. உரைஆர் - (அடியவர்) பேச்சில்
பொருந்திய. அரையா - அரசனே, ஆதரவு - புகலிடமாகக் கொள்வது;
ஆசை எனினும் ஆம். அரசன் - அரையன் என வந்தது எழுத்துப் போலி.