பக்கம் எண் :

872திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3529. முடியசடை பிடியதொரு வடியமழு
       வுடையர்செடி யுடையதலையில்
வெடியவினை கொடியர்கெட விடுசில்பலி
     நொடியமகி ழடிகளிடமாம்
கொடியகுர லுடையவிடை கடியதுடி
     யடியினொடு மிடியினதிரக்
கடியகுர னெடியமுகின் மடியவத
     ரடிகொள்கயி லாயமலையே.           4


கங்கையோடு-கங்கா நதியோடு, பொங்கும்-மிகுந்த, சடை-சடையையுடைய,
எங்கள் இறை-எங்கள் தலைவன், தங்கும்-தங்கும் கயிலாயமலை,
விங்கி-குறுக்கல்விகாரம்.

     4. பொ-ரை: சிவபெருமான் தலையில் சடைமுடியையும், கையில்
கூரிய மழுவையும் உடையவர். வெறுக்கத்தக்க கொலைத் தொழிலை
உடைய அசுரர்களை அழித்தவர். பிச்சையேற்றுத் திரியும் அச்சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம் இடபத்தின் கனத்த குரலும், யானையின் பிளிறலும்
இணைந்து மிகுந்த ஓசையுடன், மேகங்களின் இடிமுழக்கத்தை அடக்கி
அடிவாரம்வரை செல்லும் திருக்கயிலாயமலையாகும்.

     கு-ரை: முடிய - தலையில் உள்ளதாகிய. சடை - சடையையும்.
பிடியது - கையில் பிடிப்பதாகிய. வடிய - கூரிய. ஒரு மழு உடையர் - ஒரு
மழுவையும் உடையவர். செடியுடைய தலையில் - புதர்போன்ற தலையோடு.
வெடிய - வெறுக்கத்தக்க. வினை - கொலைத் தொழிலையுடைய. கொடியர்
-கொடியோராகிய, அசுரர்கள். கெட - கெடவும்.

     இடு - இடுகின்ற. சில் - சில. பலி - பிச்சைக்காக. நொடிய - சில
வார்த்தைகளைப் பேசவும். மகிழ் - விரும்புகின்ற, சிவபெருமானின்
இடமாம். கொடிய குரல் - கொடிய குரலை உடைய. விடை - இடபங்கள்.
கடிய -வேகத்தையுடைய. துடியடியினொடு - யானைக் கன்றுகளுடனே.

     இடியின் - இடியைப்போல. அதிர - ஒலிக்க.(அதனால்)கடிய குரல்
-மிக்க ஓசையையுடைய. நெடிய முகில் - விரிவாகிய மேகங்கள். மடிய
- தமது ஒலி கெட. அடி - தாள் வரையின் இடத்தில். அதர்கொள் -
செல்லும், கயிலாயமலை.