பக்கம் எண் :

259
 

அவிமூக்தீசுவரமுடையார் என்று வழங்கப்படுகின்றன. இத்தலத்தில் அக்கினீசுவரர் கோயில் ஒன்று தனியே இருந்திருக்கவேண்டும். இக்கோயிலுக்குக் கண்டராதித்தனால் ஐம்பெருங்குழு ஏற்படுத்தி நிலங்களைக் கவனிக்கவும், படையலுக்கு நெல்கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன1. இங்குள்ள விஷ்ணு கோயிலிலுள்ள இறைவன் பெயர் கோவிந்தபதியில் நின்றருளிய பெருமானடிகள் என்பது2. இது தண்டகநாட்டின் மாவட்டமான தர்மக்கோட்டத்தின் பிரிவான வல்லநாட்டில் கோவிந்தபதியிலுள்ள கோயிலிலுள்ள நின்றருளிய பெருமான் ஆகும்3. மாற்பேறுடையார் கோயிலைக் கட்டவும், சுற்றுமண்டபத்தை முற்றுப்பெறச் செய்யவும் விராட அரசன் அனையமான் என்கிற மண்டலாதித்யனால் தானம் கொடுக்கப்பட்டது4. உத்தம சோழீசுவரமுடையார் உருவம் தயார்செய்ய சேதிராயன் என்பவனால் நிலம் தானம் செய்யப்பட்டது5, உமாபத்தராகியார் (அதிசுந்தர தேவதேவியார்)உருவம் தயார்செய்ய சோழன் இராஜகேசரிவர்மனால் நிலம் தானம் செய்யப்பட்டது6. மணவாளப்பெருமாள் உருவம் செய்யவும் ஆபரணம் தயார்செய்யவும் பரகேசரிவர்மன் இராஜேந்திரசோழன் ஆட்சியில் ஆவனசெய்ததைத் தெரிவிக்கின்றது7. கோயிலில் அனையமான் பரமண்டலாதித்தன் ஒரு மண்டபம் கட்டியுள்ளான்8. நம்மாழ்வார்திருவாய்மொழியின் வரிகள் கருப்பக்கிருகத்தின் மேற்குச் சுவரில் காணப்படுகின்றன9. மணவில் கோட்டத்தின் பகுதியான மேல்பழுங்கூர்நாட்டில் சிறியரூரில் கோவிந்தபதி ஆழ்வார் கோயில் ஒன்று உள்ளது10. தோழனார் தந்தையால் கோவிந்தபதி ஆழ்வார்மீது ஒரு திருப்பதியம் பாடப்பட்டுள்ளது11.

சோழன் இராஜகேசரிவர்மன் காலத்தில் வைஷ்ணவர்களில்18 நாடு குறிக்கப்படுகின்றது. மேலும் வண்டல்படிந்த நிலங்களைப் பற்றியும் பாலாற்றில் வெள்ளம் வந்ததைப்பற்றியும், இதற்குச் செப்பனிட 1000 கூலிகள் நியமிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் 12 கோல் நிலம் கொடுக்கப்பட்டது பற்றியும் அறிவிக்கப்பெறுகின்றன12. மற்றைய கல்வெட்டுக்கள் விளக்கிற்கு, பிராமண உணவிற்கு, அபிடேகத்திற்குப் பொன், நிலம், பசுக்கள், குடங்கள் முதலியன கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன.


1. 283 of 1906.

2. 303 of 1906.

3. 314 of 1906.

4. 267 of 1906.

5. 277 of 1906.

6. 284 of 1906.

7. 321 of 1906

8. 323 of 1906.

9. 326 of 1906.

10. 326 of 1906.

11. 333 of 1906.

12. 322 of 1906.