பக்கம் எண் :

9
 

துறந்தோர் உள்ளப் பெரும் பயன்:

ஆசை நீத்தவர்க்கே வீடு தருபவன் இறைவன். பற்றற்றார்சேர் பரம்பொருளைப் பற்றுற்றார் சேர இயலாது. இதனால்தான் ஞானசம்பந்தர்"அற்றவர்க்கு அற்ற சிவன்" (தி.3 ப.120 பா.2) என்றார். பற்றற்றவரே, இயல்பாகவே பற்றற்ற பரமனைச் சேரலாம் என்றார். பற்று அறுவதற்கேபரமேசுவரன் நமக்குப் பல பிறப்பைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான்.

இக்கருத்தையே "அரியானை" என்னும் பதிக ஐந்தாம்பாடலிலும், ஏழாம் பாடலிலும் குறிக்கின்றார். அருந்துணையை என்னும் ஐந்தாம்பாடலில் "மடவாரோடும் பொருந்தணை மேல்வரும் பயனைப் போக மாற்றிப்பொது நீக்கித் தனை நினையவல்லோர்க்கு என்றும் பெருந்துணையை" (தி.6 ப.1பா.5) என்றருள்கிறார். வரும் பயனை என்னும் ஏழாம் பாடலில் "சுரும்பமரும்குழல் மடவார் கடைக்கண் நோக்கில், துளங்காத சிந்தையராய்த் துறந்தோர்யார்? அவர் உள்ளத்தில் பெரும்பயனாய்ப் பிரகாசிப்பவன் பெரும்பற்றப்புலியூர்ப்பிரான்" (தி.6 ப.1 பா.7) என்கிறார்.

இவ்விரு பாடல்களிலும், பெண்ணாசை துறந்தார்க்கே பெருமான்வீடளிப்பான், பெரும்பயனாயிருப்பான், பெருந்துணையாயிருப்பான் என்பதுதெளிவாகிறது.

எல்லா ஆசைகளும், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை(பொருள்) என்ற மூன்றில் அடங்கும். இவற்றுள்ளும் மற்ற இரு ஆசைகளைக்கடந்தாலும் பெண்ணாசை கடத்தற்கரியது என்பதனால்தான், அதனைக்கடந்தவர்கட்குப் பெரும்பயனாய் உள்ளான் இறைவன் என்கிறார் அப்பர்.

கண்ணால் காணும் இன்பம், காதால் கேட்கும் இன்பம்,நாவால் சுவைக்கும் இன்பம், மூக்கால் முகரும் இன்பம், உடலால் உற்றறியும் ஊற்றின்பம். இவ்வைந்தும் சிற்றின்பமே. சிறுபொழுது இன்பம் பயப்பதால் சிற்றின்பம் என்றனர். இவ்வைம்புல இன்பமும் ஒரு காலத்து ஓரிடத்தேநிகழ்தல் பெண்ணிடத்தேயாகலின், பெண் இன்பத்தைத் தலைமை பற்றிச் சிற்றின்பம் என்று பேசிவருகின்றனர். "கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும், ஒண்தொடி கண்ணே உள" (குறள் 1101) என்பதுவள்ளுவம். தலைமை பற்றிய முடிவான ஆசையைத் துறந்த பெரியோர்க்கேபெரும்பயனாகப் பெருமான் விளங்குகின்றான் என்பதை இப்பாடல் பகுதிகளால் விளக்கியுள்ளார். எனவே எந்த வகை ஆசையும் அற்றவர்க்கே வீடுபேறு உண்டாம் என்பதே இதனால் உணர்த்தப்படும் உண்மை என்பதைத் தெளிவோமாக.