16. திருக்கலயநல்லூர்
பதிக வரலாறு:
நம்பியாரூரர், திருவிடைமருதூர், திருநாகேச்சுரம், சிவபுரம் முதலான பல பதிகளையும் வணங்கிப் போற்றித் திருக்கலய நல்லூரில் இறைவரைத் தொழுது பாடியருளியது இத்திருப் பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 66 - 67) குறிப்பு: இத்திருப்பதிகம், சிவபிரானது திருவருட் புகழ்ச்சியாகிய புராணப் பொருள்கள் பலவற்றையும் தொகுத்தெடுத்தருளிச் செய்தது என்பதனை, "மெய்ம்மைப் புராணம் பலவும் மிகச்சிறப்பித் திசையின் விளம்பினார்" என்ற சேக்கிழார் திருமொழியானே (தி. 12 ஏ. கோ. புரா. 67) உணர்க.
பண்: தக்கராகம்
பதிக எண்: 16 திருச்சிற்றம்பலம்
156. | குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு | | குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து | | விரும்பும்வரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த | | விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில் | | அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட | | அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின் | | கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக் | | கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே. | | 1 |
1. பொ-ரை: ‘தென்னங் குரும்பை போலும் தனங்களையும், பூவை யணிந்த கூந்தலையும் உடையவளாகிய உமையம்மை தவம் மேற்கொண்டிருத்தலை அறிந்து, அவளை மணக்குங் குறிப்போடும் அங்குச் சென்று அவளது அன்பினை ஆய்ந்தறிந்து, அவள் விரும்பிய வரத்தைக் கொடுத்து, அவளை மணஞ்செய்தருளிய தேவர் தலைவனும், கண்ணையுடைய நெற்றியை உடையவனும் ஆகிய இறைவனது ஊர் யாது?’ என்று வினவின், பேரரும்புகளின் அருகே சென்று, ‘சுரும்பு’ என்னும் ஆண் வண்டுகள் இசை கூட்ட, ஏனைய பெண் வண்டுகள் பண்களைப்பாட, அழகிய மயில்கள் நடனம் ஆடுகின்ற அரங்காகிய அழகிய சோலையைச் சூழ்ந்த அயலிடத்தில், கரும்பின்
|