பக்கம் எண் :

609
 

22. திருப்பழமண்ணிப்படிக்கரை

பதிக வரலாறு:

நம்பியாரூரர் திருத்தில்லையை வணங்கி, திருக்கருப்பறியலூர் தொழுது பரவி, திருப்பழமண்ணிப்படிக்கரை யடைந்து போற்றிப் பரவியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 118)

குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரது பெருமையைப் பல்லாற்றானும் எடுத்துக்கூறி, அவர் எழுந்தருளியிருக்கும் இடமாகிய தலத்தினைச் சிறப்பித்து அருளிச்செய்தது.

பண்: நட்டராகம்

பதிக எண்: 22

திருச்சிற்றம்பலம்

219.

முன்னவன் எங்கள்பிரான் முதல்

காண்பரி தாயபிரான்

சென்னியில் எங்கள்பிரான் திரு

நீல மிடற்றெம்பிரான்

மன்னிய எங்கள்பிரான் மறை

நான்குங்கல் லால்நிழற்கீழ்ப்

பன்னிய எங்கள்பிரான் பழ

மண்ணிப் படிக்கரையே.

1

 


1. பொ-ரை: எல்லார்க்கும் முன்னே உள்ளவனும், தனக்கு முன்னுள்ள பொருள் இல்லாதவனும், யாவரினும் தலையாயவனும் அழகிய நீலகண்டத்தை உடையவனும், என்றும் அழியாது நிலைபெற்றிருப்பவனும், நான்கு வேதங்களையும் கல்லால மர நிழலிலிருந்து சொல்லியவனுமாய், எங்கள் தலைவனுமாய் உள்ள இறைவன் எழுந்தருளியிருப்பது, 'திருப்பழமண்ணிப்படிக்கரை' என்னும் தலமே.

கு-ரை: "எங்கள் பிரான்" என்பதைப் பெயர்தொறும் வைத்து ஓதினமையின், அதனையும், பொதுத் தன்மை நீக்கிச் சிறப்பிக்கும் பெயராகக் கொள்ளுதல் திருக்குறிப்பாதல் பெறப்படும். "பன்னிய எங்கள் பிரான்" என்றதன்பின், 'இருப்பது' என்னும் சொல் சொல்லெச்சமாய் மறைந்து நின்றது.