55. திருப்புன்கூர் பதிக வரலாறு: திருவாரூரில் சுவாமிகள், புற்றிடங்கொண்டாரைப் பரவையாரிடம் தூதாக அனுப்பிய செய்தி கேட்ட ஏயர்கோன் கலிக்காம நாயனார், அவர்பால் சினம் கொண்டிருந்தார். சுவாமிகள் அதை அறிந்து, தம் பிழையை உடன்பட்டுப் பெருமானிடம் நாள்தோறும் விண்ணப்பித்து வந்தார். பெருமானும் இருவரையும் மனம் ஒன்றச் செய்பவராய், ஏயர்கோன் கலிக்காமருக்குச் சூலை நோயருளி, அவரிடம் "உன்னை வருத்தும் சூலை வன்றொண்டன் தீர்க்கில் அன்றித் தீராது" என்று அருளினார். கலிக்காமரும், "வழிவழியாகத் திருவடிபற்றி நின்று வாழ்கின்ற என்னை வருத்தும் சூலை வன்றொண்டன் தீர்ப்பதினும் தீராமலே என்னை வருத்துதலே நன்றாகும்" என்றார். பெருமான் வன்றொண்டர்பால் சென்று, "நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலையை நீ சென்று தீர்ப்பாயாக" என்றருளினார். நம்பி ஆரூரர் தாமும் விரைந்து செல்பவராய், கலிக்காமருக்கு வருதிறம் செப்பிவிட்டார். கலிக்காமரும், ஆரூரரின் வரவு பேட்டு, 'அவர் வருவதன்முன், நீங்காச் சூலையை உற்ற இவ்வயிற்றோடு கிழிப்பன்' என்று கூறி, உடை வாளால் செற்றிட உயிரோடு சூலையும் தீர்ந்தது. கலிக்காமர் தேவியாரும் கணவரோடு போவது புரியுங்காலை, 'ஆரூரர் வந்தார்' என்று முன் வந்தவர் கூறினர். அதுகேட்டு, கணவர்தம் செய்கையை மறைத்து எதிர்கொண்டழைத்து பூசனைகள் புரிந்தார். பின்னர், நம்பியாரூரர் ஆவிபொன்றிடக் கிடந்த கலிக்காமரைக் கண்டு, 'புகுந்தவாறு நன்று' என மொழிந்து, 'நானும் இவர் முன்பு நண்ணுவேன்' என்று வாளைப்பற்ற, பெருமான் அருளால் அவரும் உய்ந்து, கேளிரேயாகிக், "கெட்டேன்" என விரைந்து எழுந்து வாளினைப் பிடித்துக்கொள்ள, வன்றொண்டர் வணங்கினார். ஏயர்கோனும் வணங்கி, நம்பியாரூரரின் குரைகழல் பணிந்தார். பின்னர் இருவரும் எழுந்து புல்லி மகிழ்ச்சி பொங்கத் திருப்புன்கூர்ப் புனிதர்பாதம் தொழுதபொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 406) குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவன், பலர்க்குப் பலவகையிற் செய்த பேரருட் செயல்களை எடுத்தோதிப் புகழ்ந்தருளிச்செய்தது.
|