பக்கம் எண் :

986
 

66. திருவாவடுதுறை

பதிக வரலாறு:

சுந்தரர், திருஅரிசிற்கரைப்புத்தூர் தொழுது பல பதிகளையும் வணங்கிக்கொண்டு திருவாவடுதுறை யடைந்து வலங்கொண்டு இறைஞ்சி, கோச்செங்கட் சோழரையும் சிறப்பித்துப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 93)

குறிப்பு: இத்திருப்பதிகம், மேலைத் திருப்பதிகத்தொடு ஒத்தது.

பண்: தக்கேசி

பதிக எண்: 66

திருச்சிற்றம்பலம்

672.மறைய வன்ஒரு மாணிவந் தடைய

வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்

கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற்

கடந்த காரணங் கண்டுகண் டடியேன்

இறைவன் எம்பெரு மான்என் றெப்போதும்

ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்

அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன்

ஆவ டுதுறை ஆதிஎம் மானே.

1



1. பொ-ரை: திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள, எங்கள் முதற்கடவுளே, உன்னை, அந்தணனாகிய பிரமசாரி ஒருவன் அன்புடன் வந்து அடைய, அவனது அரிய உயிரைப் போகாது நிறுத்த வேண்டி, உதிரத்தைக் கொண்ட சூலத்தையுடைய இயமனைக் காலால் உதைத்துக்கொன்ற காரணத்தை உணர்ந்து உணர்ந்து, அடியேன், 'யாவர்க்கும் முதல்வன்; எமக்குப் பெருமான்' என்று எப்பொழுதும் துதித்துத் துதித்து, அஞ்சலி கூப்பிநின்று, கழலும் சிலம்பும் ஒலித்தலைக் கொண்ட உனது செவ்விய திருவடியிடத்துக் கொண்ட அன்போடும் வந்து அடைந்தேன்; என்னை ஏற்றுக் கொண்டருள்.

கு-ரை: "காரணம்" என்றது, திருவருளை, அடுக்குக்கள், பன்மை குறித்தன. "நின்று" என்றதனை, "அஞ்சலி செய்து" என்றதன் பின் கூட்டுக. 'கழலும் சிலம்பும்' என்பது, ஆற்றலான் வந்தது. 'எங்கள்