பக்கம் எண் :



3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

8. கோயில்

பண் - புறநீர்மை

திருச்சிற்றம்பலம்
 

80.

கணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்
   கறையணற் கட்செவிப் பகுவாய்
பணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப்
   பாம்பணி பரமர்தங் கோயில்
மணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பின்
   மறைதவழ் வளரிளங் கமுகந்
திணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்
   திருவளர் திருச்சிற்றம் பலமே.                  (1)
  

இத்திருப்பதிகம்,     ‘சிவபெருமானுக்குச்  சிறந்த      கோயிலாய்
விளங்குவது தில்லைத் திருச்சிற்றம்பலமே’ என அதன்   பெருமையைக்
கூறுகின்றது.

80. கணம்-கூட்டம். ‘கூட்டமாக’ என ஆக்கம் வருவிக்க. ‘குடுமியில்
உள்ள  செம்மணிகளையுடைய’ என்க. பல தலைகளையுடைமை  பற்றி,
‘‘கணம்   விரி   குடுமி’’  என்றார்.  கவை  நா-பிளவு  பட்ட நாக்கு.
கறை-நஞ்சு.   தாடியைக்   குறிப்பதாகிய,  ‘அணல்’  என்பது  இங்கு,
ஆகுபெயராய்,  வாயைக்  குறித்தது. ’அனல்’ எனவும் பாடம்  ஓதுவர்.
கண்  செவி-கண்ணொடு  பொருந்தி  நிற்கும்  காது. பகு வாய்-பிளந்த
வாய்.   பணம்  விரி  துத்திப்  பொறி-படத்தின்கண்  பரந்த,  ‘துத்தி’
என்னும்  பெயரை உடைய புள்ளிகள். மொழுப்பு-உச்சி.  மழை-மேகம்.
‘துணர்’     என்பது,     ‘‘திணர்’     எனத்    திரிந்து    நின்றது.
அரும்பு-தோன்றுகின்ற,    ‘தவழ்    பெரும்பற்றப்புலியூர்,   அரும்பு
பெரும்பற்றப்புலியூர்’    எனத்    தனித்தனி    முடிக்க.   ‘புலியூர்த்
திருச்சிற்றம்பலம்’ என இயையும். திருவளர்-அழகுமிகுகின்ற.