பக்கம் எண் :



9. திருக்களந்தை ஆதித்தேச்சரம்

பண்-புறநீர்மை

திருச்சிற்றம்பலம்
 

91.

கலைகடம் பொருளும் அறிவுமாய் என்னைக்
   கற்பினிற் பெற்றெடுத் தெனக்கே
முலைகடந் தருளுந் தாயினும் நல்ல
   முக்கணான் உறைவிடம் போலும்
மலைகுடைந் தனைய நெடுநிலை மாட
   மருங்கெலாம் மறையவர் முறையோத்
தலைகடல் முழங்கும் அந்தண்நீர்க் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே.                  (1)

 

92.

சந்தன களபம் துதைந்த நன்மேனித்
   தவளவெண் பொடிமுழு தாடும்
செந்தழ லுருவிற் பொலிந்துநோக் குடைய
   திருநுத லவர்க்கிடம் போலும்
 

இத்திருப்பதிகமும்  முன்னையதுபோல,   ‘சிவபிரானுக்கு  இடமாய்
விளங்குவது, திருக்களந்தை ஆதித்தேச்சரமே’ என்கின்றது.

91.     ‘‘அறிவு’’ என்றது, அக் கலைகளின் பொருள்களை அறிந்த
அறிவை.  ‘‘அறிவுமாய்’’  என்ற எச்சம், ‘‘நல்ல’’ என்னும் பெயரெச்சக்
குறிப்பொடு    முடியும்.   ‘என்னைப்பெற்று,   எனக்கே    முலைகள்
தந்தருளும்  தாய்’  என்க.  கற்பினில்  பெற்று.  கற்புக்   கடம்பூண்ட
நெறியானே  பெற்று. எடுத்து-கையில் ஏந்தி. ‘‘எனக்கே’’ என்ற ஏகாரம்
தேற்றம்.  ‘‘நல்ல’’  என்றதில்  நன்மை, அருள், போலும். அசைநிலை,
மருங்கு,  ஏழனுருபு.  முறை  ஓத்து-ஒலி ஒழுங்கினை யுடைய  வேதம்.
‘கடல்போல முழங்கும்’ என உவம உருபு விரிக்க. ‘‘களத்தூர்’’ என்பது,
‘களந்தை’   என   மரூஉவாக்கப்பட்டது.  ‘ஆதித்தேச்சரம்’   என்பது
அங்குள்ள திருக்கோயிலின் பெயர்.

92.     களபம்-குழம்பு.  துதைந்த-செறிந்த.  ‘மேனி    முழுதினும்
வெண்பொடி  ஆடும்  உரு’ என்க. தவள வெண்பொடி, ஒரு  பொருட்
பன்மொழி ; ‘மிகவும் வெள்ளிதாகிய