பக்கம் எண் :



12. திரைலோக்கிய சுந்தரம்

பண் - காந்தாரம்

திருச்சிற்றம்பலம்

122.
 

நீரோங்கி வளர்கமலம் நீர்பொருந்தாத் தன்மையன்றே !
ஆரோங்கிமுகம்மலர்ந்தாங்கருவினையேன்திறம்மறந்தின்
றூரோங்கும் பழிபாரா துன்பாலே விழுந்தொழிந்தேன் ;
சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய 
                                  [சுந்தரனே.(1)
 

இத்  திருப்பதிகம்  திரைலோக்கிய   சுந்தரத்துப்    பெருமானைக்
காதலித்த  தலைவியது  கூற்றாயும், அவள் செவிலித்தாயது  கூற்றாயும்
அமைந்தது.

122. முதலடியை ஈற்றிலும், ஈற்றடியை முதலிலும் கொண்டு உரைக்க.
‘ஆர  ஓங்கி’  என்பது  தொகுத்தல் பெற்று ‘ஆரோங்கி’என நின்றது.
ஆர-நிரம்ப.     ஓங்கி-மகிழ்ச்சி     மிகுந்து.    ‘முகம்    மலர்ந்து
விழுந்தொழிந்தேன்’  என  இயையும்.  ‘என் திறம் மறந்து’ என வேறு
எடுத்துக்கொண்டு  உரைக்க.  திறம்-பெண்  தன்மை  ;  அவை நாண்
முதலியன  ;  இஃது  உண்மைப்  பொருளில் உலகியலை உணர்த்தும்
பழி-அலர்,  ‘‘விழுந்தொழிந்தேன்’’  என்பது  ஒரு சொல் தன்மைத்து,
சீர்-அழகு.   ‘கோடை’  என்பது  ஊரின்  பெயரும்,  திரைலோக்கிய
சுந்தரம்’ என்பது திருக்கோயிலின் பெயருமாம். ‘அருவினையேன் என்
திறம் மறந்து, ஊர் ஓங்கும் பழியையும் பாராது, ஓங்கி, முகம் மலர்ந்து
உன்பாலே  விழுந்தொழிந்தேன்; அவ்வாறாகியும், உனது தலையளியை
நான்  பெறாதிருத்தல்,  நீர்  ஓங்கி வளர் கமலம் நீரைப் பொருந்தாத
தன்மையன்றோ’   என்க.   நீர்  ஒங்கி  வளர்  கமலம்-நீரால் ஓங்கி
வளர்தற்குரிய தாமரை. நீர் பொருந்தாத் தன்மை - அந்நீரைப் பெறாத
தன்மை.  அஃதாவது, வாடி உலர்ந்து அழிந்துபோதல். முதல் அடிக்கு,
‘நீரில்   உள்ள  தாமரையில்  நீர்  ஒட்டாதிருக்கின்ற  தன்மை’ என
உரைப்பாரும் உளர். இத் திருப்பாட்டு, தலைவி கூற்று.