பக்கம் எண் :



14. திருப்பூவணம்

பண் - பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்
 

144.

திருவருள் புரிந்தாள் ஆண்டுகொண் டிங்ஙன்
   சிறியனுக் கினியது காட்டிப்
பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின்
   பெருமையிற் பெரியதொன் றுளதே ?
மருதர சிருங்கோங் ககில்மரம் சாடி
   வரைவளங் கவர்ந்திழி வையைப்
பொருதிரை மருங்கோங் காவண வீதிப்
   பூவணம் கோயில் கொண்டாயே.                 (1)
 

இத்திருப்பதிகம், பல பொருளும் பற்றி வருவது.

144. இதனுள்  இறுதி ஒன்றொழித்து ஏனைய பாடல்களில் மூன்றாம்
அடி  முதலாகத் தொடங்கி உரைக்க.‘ஆளாக ஆண்டுகொண்டு’ என்க.
இங்ஙன் - இவ்வுலகில். இனியது காட்டி - இன்பந்தரும் பொருள் இது
என்று  அறிவித்து. பெரிது அருள்புரிந்தமையாவது. ஆனந்தத்தைத்தர
நினைந்தமை. ‘‘வறியார்க்கொன்று ஈவதே ஈகை’’ (குறள்-221.) ஆதலின்,
அதனைச்  செய்வோரது  பெருமையையே  உலகத்தார்  உரையாலும்
பாட்டாலும்  சிறந்தெடுத்துப்   போற்றுதல்போல,   (மேற்படி   232.)
மெய்ந்நெறி வகையில்  மிகச்  சிறியேனாகிய  எனக்கு அருள் புரிந்த
உனது பெருமையினும் சிறந்த பெருமை வேறொன்று இல்லை என்பார்.
‘‘நின் பெருமையிற்  பெரியதொன்றுளதே’’  என்றார்.  ‘மருது,  அரசு,
கோங்கு,   அகில்  என்னும்  மரங்களைச்சாடி’  என்க.  இரு-பெரிய.
சாடி-முரித்து.  வரை வளம் - மலைபடு பொருள்கள் : அவை கத்தூரி,
குங்குமம் முதலியன. ‘‘திரைமருங்கு’’ என்றது, ‘கரைக்கண்’ என்றவாறு,
‘திரைகளைத்  தன்மருங்கில்  ஓங்கக்கொண்ட வீதி’ என்பாரும் உளர்.
ஆவண         வீதி - கடைத்தெரு.        பூவணம்    கோயில்
கொண்டாயே-திருப்பூவணத்தைக் கோயிலாகக் கொண்டவனே.