பக்கம் எண் :



15. திருச்சாட்டியக் குடி

பண் - பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்
 

152.

பெரியவா ! கருணை இளநிலா வெறிக்கும்
   பிறைதவழ் சடைமொழுப் பவிழ்ந்து
சரியுமா சுழியம் குழைமிளிர்ந் திருபால்
   தாழ்ந்தவா காதுகள் ! கண்டம்
கரியவா ! தாமும் செய்யவாய் முறுவல்
   காட்டுமா ! சாட்டியக் குடியார்
இருகைகூம் பினகண் டலர்ந்தவா முகம் ! ஏழ்
   இருக்கையில் இருந்தஈ சனுக்கே.                 (1)
 

இத்திருப்பதிகம்  இறைவரது  பெருமையையே  விரிப்பது.  மற்றும்,
இத்தலத்து அந்தணர்க்கு அருளுதலையும் சிறந்தெடுத்துக் குறிப்பது :

152.     ‘‘பெரியவா’’   முதலியன,   ‘பெரியவாறு’    முதலியவை
கடைக்குறைந்து    வந்தன.    அவையெல்லாம்     செவ்வெண்ணாய்
நின்றமையின்,  இறுதியில்,  ‘இவை  அழகிய’ என்னும்   சொல்லெச்சம்
வருவித்து  முடிக்க.  ‘கருணை  பெரியவா’  என  மாற்றுக.   கருணை
ஒன்றேயாயினும்   அதனால்   விளையும்  பயன்கள்   பலவாதல்பற்றி,
‘‘பெரிய’’  எனப்  பன்மையாகக்  கூறப்பட்டது.  இள  நிலா-சிற்றொளி.
மொழுப்பு-முடி.   சுழி  அம்  குழை-வளைந்த  அழகிய    குண்டலம்.
தாழ்ந்தவா-தொங்கினவாறு.  ‘காதுகளில்’  என  ஏழாவது   இறுதிக்கண்
தொக்கது.  எனவே,  அதனை,  ‘‘சுழி’’  என்றதற்கு    முன்னேகூட்டுக.
‘‘தாமும்’’  என்ற  உம்மை, ‘தமது உறுப்புக்கள் இயற்கையில்  இவ்வாறு
விளங்குதலேயன்றி’   என,   இறந்தது  தழுவிய  எச்சம்.   ‘‘முறுவல்’’
என்றது,          ‘வெள்ளிய         முறுவல்’         என்றவாறு.
சாட்டியக்குடியார்-திருச்சாட்டியக்குடியில் உள்ள அந்தணர்கள்.   ‘முகம்
அலர்ந்தவா’  என  மாற்றிக்  கொள்க.  ‘‘தாமும்  முறுவல்  காட்டுமா’’
என்றதை   இதன்  பின்னர்க்  கூட்டுக.  அந்தணர்கள்   கைகுவித்துத்
தொழுதலைக்  கண்டு  இறைவற்கு உவகையால்முகம் மலர்ந்தது  என்க.
ஏழ்   இருக்கை-ஏழு   நிலைகள்   அமைந்த  விமானத்தை  யுடைய
மாளிகை. இது திருச்சாட்டியக்குடிக்