இத்திருப்பதிகத்தில் இரண்டு திருப்பாட்டுக்களே காணப் படுகின்றன. இவை இரண்டும் திருவாரூர்ப் பெருமானது திருவுருவச் சிறப்பையே வியந்து கூறுகின்றன. 183. வால் முத்தின்-வெண்மையான முத்துக்களையுடைய. சரி-தோள்வளை. வளை-கைவளை. முரிவது ஓர் முரிவு-விளங்குவதாகிய ஒரு விளக்கம். ‘உமாதேவியின் அளவிலும், கங்காதேவியின் அளவிலும் அடங்குவதன்று; மேற்பட்டது’ என்றவாறு. உம்மைகள், எண்ணோடு சிறப்பு. ‘‘என்னோ தம் ஒருப்பாடு’’ என்றதை, ‘தம் ஒருப்பாடு என்னோ’ என மாற்றி இறுதியிற் கூட்டி உரைக்க. ஒருப்பாடு-கொள்கை. ‘வான் பழித்து இம்மண் புகுந்து மனிதரை ஆட்கொள்ளுதல்போலும்’ என்பதாம். இவர் முசுகுந்தச் சக்கிரவர்த்தியால் இந்திரலோகத்திலிருந்து கொணர்ந்து திருவாரூரில் எழுந்தருளுவிக்கப் பட்டவராதல் அறிக. ஆதி-முதல்வன்; இது பன்மையொருமை மயக்கம். வீதி வீடங்கர்-தெருவில் உலா வரும் அழகர். இது தியாகராசருக்குப் பெயர். திருவாரூரில் புற்றிடம் கொண்டார் திருமூலட்டானத்தேயிருக்க, இவர் வீதியில் எழுந்தருளிவந்து காட்சி வழங்குபவராதலின் இப்பெயர் உடையராயினார். இவர் வீதியில் எழுந்தருளுங்கால் நடனம் புரிந்து வருதலும், அந்த நடனம், ‘அசபா நடனம்’ என்று போற்றப் |