இத்திருப்பதிகம், இறைவன் தில்லையை இடமாகக் கொண்ட சிறப்பினை வியந்தருளிச்செய்தது. இதற்கு உரித்தாகச் சொல்லப்பட்ட ‘சாளரபாணி’ என்னும் பண் பிற திருமுறைப் பாட்டுக்களில் காணப்படாதது. 185.‘‘எத்திசையும்’’ என்பதை முதலிற் கொள்க. வயிரமணி, இருபெயரொட்டு, தொத்து-பூங்கொத்து. இது தூண்டு விளக்குக்களுக்கு உவமை. ஏய்ப்ப - பொருந்த வைக்க; ஏற்றி வைக்க. ‘ஏய்ப்ப ஏத்தும்’ என இயையும். ‘‘அத்தனுக்கும்’’ என்ற உம்மை சிறப்பு. ‘அவ்வம்பலமே’ சுட்டு வருவிக்க. ‘‘அம்பலமே’’ என்ற ஏகாரம், ‘பிறிதிடம் இல்லை’ என்னும் பொருட்டாய், அம்பலத்தது சிறப்புணர்த்தி நின்றது. 186. கடிஆர்-விளக்கம் (புகழ்) பொருந்திய, ‘உன்றன்’ என்னாது, ‘உன்’ என்றே ஓதுதல் பாடம் ஆகாது என்க. ‘அமரர் உலகம்’ என்பது குறைந்துநின்றது. ‘அமருலகம் என்பதனை முதலிற் கூட்டுக. ‘‘அடியார் ஆள நீ ஆளாது’’ என்றது, ‘அதன்கண் விருப்பம் இன்மையால் விடுத்தாய்’ என்னும் குறிப்பினது. இன்னும், அடியார் பலரையும் அமருலகம் ஏற்றுதல் தில்லையிலிருந்தேயாம் என்பதும் கருத்து. பின்னர் நாவுக்கரசர் முதலிய மூவர் முதலிகளுக்கு அருள்புரிந்தமையை எடுத்தோதுவதும் இக்கருத்துப் பற்றியே என்க. முடியா-என்றும் வளர்கின்ற, ‘‘குடிவாழ்க்கை கொண்டு’’ என்றது. ‘அவருள் ஒருவனாய்’ என்றபடி. குலாவி-மகிழ்ந்து. |