இத்திருப்பதிகம், தில்லைப் பெருமான்மேல் காதல் கொண்டு அவனைக் காண விரையும் ஒருத்தி கூற்றாக அருளிச்செய்யப்பட்டது. முழுவதும் அந்தாதியாக அமைந்தது. பாடலின் ஒவ்வோர் அடியும் இடையில் கூன்பெற்று வந்து நாற்சீரான் ஆயது. 247. கோலம்-அழகு. ‘கோலக் கண்’ என இயையும், ‘‘கொடி ஏர் இடையீர்’’ என்றதில் ஏர், உவம உருபு. ‘‘இடையீர்’’ என்றது பாங்கியரை. பரம் ஆய-எப்பொருட்கும் முன்னதாகிய. பரஞ் சுடர்-மேலான ஒளி. சேல் உகளும்-கயல்மீன்கள் துள்ளுகின்ற. ஏல்-ஏற்றல்; முதனிலைத் தொழிற்பெயர். ஏற்றல்-எழுந்தருளியிருக்க இசைதல். ‘ஏலஉடை’ என்பது பாடம் அன்று. ‘‘இறை’’ என்றது. சொல்லால் அஃறிணையாதலின், ‘‘பரம், சுடர்’’ என்றவற்றோடு’ இயைந்து நின்றது. கொல்,ஐயத்துக்கண் வந்தது. 248. ‘‘மணி, கனல்’’ என்றவை உவமை ஆகுபெயர்கள். ‘‘ஆண், பெண், அரு, உரு’’ என்ற நான்கும், ‘‘என்று’’ என்பதனோடு தனித்தனி இயைந்தன. அரிது-அரிது பொருள். |