இத்திருப்பதிகம் தில்லைப் பெருமானைக் காதலித்த தலைவியும், அவளை வளர்த்த செவிலித் தாயும் அப்பெருமானை நினைந்து அரற்றியவாறாக அருளிச்செய்யப்பட்டது. இதுவும் அந்தாதியாக அமைந்தது. 257. வார்-தேன் ஒழுகுகின்ற. அணி-அழகிய. ‘நறுமலரை வண்டு கெண்டி (கிளறி)ப் பாடுகின்ற பஞ்சமப் பண்’ என்க. ‘‘மாலை’’ இரண்டனுள் பின்னது மாலைக் காலம். ‘பஞ்சமமும், செண்பக மாலையும், மாலைக் காலமும் ஆகிய இவை நம் வனமுலைகள் மெலியுமாறு வந்து வந்து நம்மை மயக்கும்’ என்க. ஆல், ஓ அசைநிலைகள். சீர் அணி-அழகைக்கொண்ட. ‘‘ஆர் எனை அருள்புரிந்து அஞ்சல் என்பார்’’ என்றதை இறுதியிற் கூட்டுக. ‘‘எனை’’ என்றது, ‘‘அஞ்சல் என்பார் என்பதனோடு முடியும். என் ஆதரவு ஆவியின் பரம் அன்று-எனது காதல் என் உயிரின் அளவினதன்று; மிக்கது, ‘‘சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்-உயிர்தவச் சிறிது காமமோபெரிதே’’ என்னும் குறுந்தொகைப் பகுதியை நோக்குக (18). ஆதரவு-விருப்பம்; காதல். ‘அஃது என்னால் தாங்கும் அளவினதாய் இல்லை’ என்றபடி. |