பக்கம் எண் :



27. கோயில் -‘‘வானவர்கள் வேண்ட’’

பண்-பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்
 

268.

வானவர்கள் வேண்ட வளர்நஞ்சை உண்டார்தாம்
ஊனமிலா என்கை ஒளிவளைகள் கொள்வாரோ
தேனல்வரி வண்டறையுந் தில்லைச்சிற் றம்பலவர்
நானமரோ என்னாதே நாடகமே யாடுவரே.           (1)
 

269.

ஆடிவரும் காரரவும் ஐம்மதியும் பைங்கொன்றை
சூடிவரு மாகண்டேன் தோள்வளைகள் தோற்றாலும்
தேடிஇமை யோர்பரவும் தில்லைச்சிற் றம்பலவர்
ஆடிவரும் போதருகே நிற்கவுமே ஒட்டாரே.          (2)
 


இத்திருப்பதிகமும்     செவிலிகூற்று    ஒன்றொழித்து முன்னைத்
திருப்பதிகமே போல்வது.

268,   ‘தேவர்கள் இறந்தொழியாதவாறு நஞ்சினை உண்டு அன்று
அவர்களைக் காத்த பேரருளாளர், இன்று என் வளைகளைக் கவர்ந்து
எனக்கு   இறந்துபாடு   உறுவிக்கின்றாரோ  !  இது  வியப்பாகின்றது’
என்பது,  முதல்  இரண்டடிகளின்  பொருள்.  ஓகாரம், இழிவு சிறப்பு.
‘தேன்  வண்டு’  என  இயையும்.  நமர்-  நம் உறவினர். என்னாது -
என்று  சொல்லாதபடி; என்றது, ‘என் துன்பத்தைத் தவிர்க்காது நின்று’
என்றதாம். ‘‘நாடகம்’’ என்றது சிலேடை; இறைவனது அருட்கூத்தோடு,
போலி    வேடங்கொண்டு    நடித்தலையும்   குறித்தலின்.  தனக்கு
அருளாமை   பற்றி,  அனைத்துயிர்க்கும்  அருள்புரியும்   கூத்தினை,
‘நாடகம்’ என்றாள் என்க.

269.  காரரவு கரும் பாம்பு. ஐம்மதி-அழகிய சந்திரன். ‘‘கண்டேன்’’
என்றதைப்   பெயராக்கி,   ‘அதனை,  ‘‘தோற்றாலும்’’ என்பதனோடு
முடிக்க.   ஆடிவருதல்,  வீதியின்கண்  என்க.  ‘நான்  வளைகளைத்
தோற்கும்  அளவிற்குக் காதல்  கரைகடந்து நிற்கவும், இவர் என்னை
அருகணையவும்    ஓட்டாது’    ஓட்டுகின்றார்;    இவர்   தம்மைக்
காதலித்தார்க்கு அருளுந்திறம் இதுதான் போலும்’ என்றபடி.