குருபாதம் ஒன்பதாந் திருமுறை ஆசிரியர்கள் வரலாறு திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர், வித்துவான். திரு. வி. சா, குருசாமி தேசிகர். ஒன்பதாந் திருமுறையைப் பாடியருளிய ஆசிரியர்கள் ஒன்பதின்மர் ஆவர். அவர்கள் திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்திநம்பிகாடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார். புருடோத்தமநம்பி, சேதிராயர் என்போராவர். ‘‘செம்பொன்மணி அம்பலத்து நிருத்த னார்க்குத் திருவிசைப்பா உரைத்தவர்தம் திருப்பேர் சொல்லில் பம்புபுகழ் செறிதிருமா ளிகைமெய்த் தேவர் பரிவுடைய சேந்தனார் கருவூர்த் தேவர் நம்பி காடவர்கோன் நற்கண்ட ராதித்தர் நன்குயர்வே ணாட்டடிகள் திருவாலி யமுதனார் அம்புவியோர் புகழ் புருடோத்தமர் சேதிராயர் ஆகஇவர் ஒன்பதின்மர் தாமுறைகண்டடைவே’’ என்ற பாடலால் அறியலாம். இவர்கள் வரலாற்றை இயன்ற அளவு தொகுத்துக் காண்போம். 1. திருமாளிகைத் தேவர் திருவாவடுதுறை நவகோடி சித்தர்புரம் என்ற பெயரையுடைய திருத்தலம். இத்தலத்தில் போகநாதர் என்னும் சித்தர் ஞானயோக சாதனை செய்து மகிழ்ந்திருந்தார். இவருடைய சீடர்களில் ஒருவர் திருமாளிகைத்தேவர். இவரோடு உடன் உறைந்த போகருடைய சீடர்களில் கருவூர்ச்சித்தரும் ஒருவர். ‘திருமாளிகைத் தேவர் சைவவேளாண் குலத்தினர். ‘சோழ மன்னர்களின் தீட்சா குருவாக விளங்கியவர். திருவிடைமருதூரில் வாழ்ந்துவந்த பரி ஏறும் பெரியோர், தெய்வப் படிமப்பாதம் வைத்தோர், மாணிக்கக்கூத்தர், குருராயர், சைவராயர் எனப்படும் ஐந்து கொத்தாருள் ஒருவரான சைவராயர் வழியில் |