குருபாதம் திருவிசைப்பா இலக்கிய நலமும் பண்பாடும் வித்துவான். திருமதி. ப. நீலா திருவிசைப்பாவும் திருப்பல்லாண்டுமாக இணைந்த ஒன்பதாம் திருமுறை ஓர் அரிய இலக்கியப் பண்பாட்டுப் பெட்டகம். இலக்கியங்கள் பக்தியுணர்வை வெளிக்காட்டுவதைக் காட்டிலும் இதுபோன்ற பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட எழுந்த தோத்திரங்கள் இலக்கியமாக ஒளிர்வதே மிகப் போற்றற்குரிய அற்புதமாகும். இயற்கையாக இறைவனைக் காண்பது முன்னது. இறைவனாக இயற்கையைக் காண்பது பின்னது. ஒரோவிடங்களில், ஒன்றில் ஒன்று மறைந்து ‘மரத்தில் மறைந்தது மாமதயானை’ என்பது போலவும் தோற்றந்தரும். பன்னிரண்டாம் திருமுறையாகிய பெரிய புராணத்தில் ஆனாய நாயனார் இயற்கையாக இறைவனை-சரஞ்சரமாகப் பூத்துக்குலுங்கும் கொன்றையை பாம்பணிப் பரமனாகக் காணுந்திறம் இங்கே நோக்கற்குரியது. சென்றணைந்த ஆனாயர் செய்தவிரைத் தாமமென மன்றல்மலர் துணர்தூக்கி மருங்குதாழ் சடையார்போல் நின்றநறுங் கொன்றையினை நேர்நோக்கி நின்றுருகி ஒன்றியசிந் தையில்அன்பை உடையவர்பால் மடைதிறந்தார். சங்கத் தொகை நூலாம் கலித்தொகை இறைவனாக இயற்கையைக் காட்டுகிறது. ஒருகுழை ஒருவன்போல் இணர்சேர்ந்த மராஅமும் பருதியஞ் செல்வன்போ னனையூழ்த்த செருந்தியும் மீனேற்றுக் கொடியோன் போல மிஞிறார்க்குங் காஞ்சியும் ஏனோன்போல் நிறங்கிளர்பு கஞலிய ஞாழலும் ஆனேற்றுக் கொடியோன்போல் எதிரியஇ லவமுமாங்கத் தீதுதீர் சிறப்பின் ஐவர்கள் நிலைபோலப் போதவிழ் மரத்தொடு பொருகரை கவின்பெற. (பாலைக்கலி) |