நெடுங்காலமாக இருந்து வரும் பலாமரம் ஒன்றுள்ளது. இதுவன்றிப் பிற்காலத்தில் வைத்துப் பயிராக்கப்பட்டுள்ள பலா மரங்களும் கோயிலுள் உள்ளன. அடுத்து வலமாக வரும்போது அம்பாள் சந்நிதி - கிழக்கு நோக்கி முன் மண்டபத்துடன் தனிக் கோயிலாக உள்ளது. கருவறை, அகழி அமைப்புடையது. வலம் வரலாம். கோஷ்டமூர்த்தமாக விநாயகர், அன்ன பூரணி, அபயவரதத்துடன் அமர்ந்துள்ள அம்பாள், துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டிகேஸ்வரி சந்நிதி உள்ளது. சந்நிதி எதிரில் பிராகாரத்தில் தலமரமான வில்வம் உள்ளது. வலப்பால் சுந்தரேஸ்வரர் சந்நிதி - கிழக்கு நோக்கியதாகத் தனிக் கோயிலாக உள்ளது. மீனாட்சியம்மை தெற்குமுக தரிசனம். உள்ளே வலம் வரலாம். கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரமன், துர்க்கை முதலிய - மிகச் சிறிய திருவுருவங்கள் உள்ளன. சண்டேஸ்வரர் உள்ளார். சந்நிதியின் எதிரில் தீர்த்தக் கிணறு உள்ளது. பிராகாரத்தில் யாகசாலையும் பைரவர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன. செப்புக் கவசமிட்ட கொடிமரம், இங்குள்ள பெருமானை விஷ்ணு வழிபட்டதால், விஷ்ணுவின் பாதம் பத்மபீடத்தில் கொடிமரத்தின் முன்பு உள்ளது. கொடிமரத்தின் பின்னால் உள்ள நந்தி - சுவாமிக்கு எதிர்ப்புறமாக கிழக்கு நோக்கியுள்ளது. இதற்குப் பின்னால் நின்ற நிலையில் அதிகார நந்தி சுவாமியைப் பார்த்தபடியுள்ளது. மூலவர் சந்நிதியில் உள்ள நந்தியும் வெளியில் உள்ளதைப்போலவே கிழக்கு நோக்கியுள்ளது. இவைகளுக்கு இடையில் திருவலம் மௌனசுவாமிகள் கட்டுவித்த சுதையாலான பெரிய நந்தி கிழக்கு நோக்கியே உள்ளது. நேரே நின்று மூலவரைத் தரிசிக்க முடியாதவாறு இது மறைக்கின்றது. முன்னுள்ள நந்தியைப் போலவே பெரியதாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது கட்டப் பட்டிருக்கலாம் என்றே தோன்றுகின்றது. நந்தி, கிழக்கு நோக்கி இருப்பதற்குச் சொல்லப்படும் வரலாறு வருமாறு : இத்தலத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் கஞ்சன்கிரி என்றொரு மலையுள்ளது. அது தற்போது ‘காஞ்சனகிரி’ என்று வழங்குகின்றது. இம்மலையில் கஞ்சன் என்னும் அசுரன் இருந்து வந்தான். இம்மலையிலிருந்துதான் தீர்த்தம் இக்கோயிலுக்கு மிகப்பழங்காலத்தில் கொண்டு வரப்பட்டது. அவ்வாறு கொண்டு வருவதைக் ‘கஞ்சன்’ தடுத்தான். செய்வதறியாது உரியோர் இறைவனிடம் முறையிட, |