மூன்று நிலைகளுடைய ராஜகோபுரம். உட்புறம் விசாலமாக உள்ளது. கோபுரவாயிலில் சூரியன் சந்திரன் உருவங்கள் உள்ளன. வலப்பால் விநாயகர் சந்நிதியும் இடப்பால் ஆறுமுகர் சந்நிதியும் உள்ளன. இந்த ஆறுமுகர் பன்னிருகரங்களுடன் மயில்வாகனராக விளங்குகிறார். இவருடைய வடிவில் வலப்பால் உள்ள ஆறுகரங்களுள் முதல் கரம் சக்கரமும், இடப்பாலுள்ள ஆறுகரங்களுள் முதலாவது கரம் சங்கும் ஏந்தியிருப்பது விந்தையான அமைப்பாகவுள்ளது. இச்சந்நிதியில் பிரார்த்தனை செய்து கொண்டால் விஷக்கடி நீக்கம் பெறுவது இன்றும் பிரசித்தமாகவுள்ளது. அடுத்து கஜலட்சுமி சந்நிதியும், பைரவர், நவக்கிரக சந்நிதிகளும் உள. முகப்பு வாயிலின் மேற்புறம் ரிஷபாரூடர் சுதைசிற்பமுள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் முன்மண்டபத்தில் இடப்பால் அம்பாள் சந்நிதி, மகாமண்டபத்தில் விநாயகர், நால்வர், புகழ்த்துணை நாயனார் அவர் மனைவியார் இத்தலத்தில் வழிபட்டுப் பேறுபெற்ற உண்மையானந்த முனிவர் முதலிய சந்நிதிகள் உள்ளன. மூலவர் - சதுரபீடம். உயர்ந்தபாணம். நீண்ட உருத்திராக்க மாலையுடன் தரிசிக்கும் அழகு அனுபவித்துணரத்தக்கது. நாடொறும் மூன்று கால வழிபாடுகள். கோச்செங்கட் சோழனின் கல்வெட்டில் இத்தலம் “குலோத்துங்க சோழ வளநாட்டு அழகார்திருப்புத்தூர்” என்று குறிக்கப்பட்டுள்ளது. “மின்னுஞ் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே துன்னுங் கடல்நஞ் சிருள்தோய் கண்டர் தொன்மூதூர் அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டு பொன்னும் மணியும் பொருதென்கரைமேற் புத்தூரே” (சம்பந்தர்) “வேதனை மிகுவீணையின் மேவிய கீதனைக் கிளருந் நறுங்கொன்றையம் போதனைப் புனல் சூழ்ந்த புத்தூரனை நாதனை நினைந்து என்மனம் நையுமே.” (அப்பர்) “அகத்தடிமை செய்யும் அந்தணன்தான் அரி சிற்புனல் கொண்டு வந்தாட்டுகின்றான் மிகத்தளர் வெய்திக்குடத்தையும் நம்முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும் வகுத்தவனுக்கு நித்தற்படியும் வருமென்றொரு காசினை நின்ற நன்றிப் புகழ்த்துணை கைப்புகச் செய்து உகந்தீர் பொழிலார் திருப்பத்தூர் புனிதன்நீரே.” (சுந்தரர்) |