பக்கம் எண் :

சீறாப்புராணம்

1553


இரண்டாம் பாகம்
 

ணுண்டாகிய பயத்தையும் மருளுகின்ற பொல்லாங்குகளினாலான மயக்கத்தையு மொழித்து அந்த முகம்ம தென்பவர் தமது பெரியவனான ஆண்டவனது கிருபையால் எனது பிராணனைக் காப்பாற்றித் தந்த தன்மையாகிய காருண்ணியத்திற்கு நம்மாற் பதிலுபகாரஞ் செய்யக் கூடுமா? கூடாது.

 

4274. சிறுமை செய்பவர் நாணுறக் கொடியவெந் தீமை

     பெறுவ ரென்பது நல்வினை யியற்றிய பெரியோர்

     முறையி னல்வழி பெறுவரென் பதுமுன மெடுத்த

     வுறைக ழித்தவை வாளெனக் குரைத்திட வுணர்ந்தேன்.

97

     (இ-ள்) அன்றியும், கீழ்மையான செய்கைகளைச் செய்பவர்கள் வெட்கத்தைப் பொருந்தும் வண்ணம் கொடுமையான வெவ்விய தீங்கையடைவார்க ளென்பதையும், நன்மை பொருந்திய செயல்களைச் செய்த மேலோர்கள் ஒழுங்கோடும் நல்ல சன்மார்க்கத்தை யடைவார்களென்பதையும் யான் ஆதியில் எனது கையினால் தாங்கிய உறையை நீக்கிய அவ்வாளா யுதமானது எனக்குத் தெரிவித்திட யான் அதைத் தெரிந்தேன்.

 

4275. தகைமை சேர்மனப் பொறையினா லுந்தய வாலு

     மகிமை மீறிய வரத்தினா லும்வலி யாலு

     நிகரி லாதபே ரறிவினா லுந்நெறி யாலு

     மகமு லாவிய விறையவ னபியென லாமால்.

98

     (இ-ள்) ஆதலால் தகுதி பொருந்திய இதயத்தினது பொறுமையாலும், காருண்ணியத்தாலும், பெருமையான தோங்கப் பெற்ற வரத்தாலும், வலிமையாலும், ஒப்பற்ற பெரிய அறிவாலும், சன்மார்க்கத்தாலும், உள்ளத்தின்கண் குலாவா நிற்கும் யாவற்றிற்குங் கடவுளான ஆண்டவனது நபியென்று அவரைச் சொல்லலாம்.

 

4276. வைய முந்திகை யும்பெரு வானமும் வானத்

     தைய ருந்திரை யாழியு நரருமற் பகலும்

     வெய்ய னுஞ்சசி யும்பிற வும்விரை மேனிச்

     செய்ய ரின்றெனி லின்றென யாவுந்தீய் வுறுமால்.

99

     (இ-ள்) அன்றியும், இந்தப் பூலோகமும், எண்டிசைகளும், பெரிய வானலோகமும், அவ்வான லோகத்தின்கண் ணுள்ள தேவர்களும், அலைகளை யுடைய சமுத்திரமும், ஆடவர்களும், இரவும், பகலும், சூரியனும், சந்திரனும், மற்றவைகளும், சந்திரனது பிரகாசத்தை யொத்த திருமேனியை யுடைய நேர்மை யுள்ளவரான அந்த முகம்மதென்பவர் இல்லையாயின் அனைத்தும் இல்லையென்று தீய்ந்து போகும்.