பக்கம் எண் :

சீறாப்புராணம்

288


முதற்பாகம்
 

தேசாந்தரிகளாகிய வியாபாரிகளும் நெருங்கி மாறாத சுமைகளைக் கொண்டு கீழே இறங்கி அவ்வாற்றின்கண் ஸ்நானஞ்செய்து பரிசுத்தம் பொருந்திய வாசனையுடைய பொலிவான அன்னத்தை யருந்தி அரிய அந்தப் பகற் பொழுதைக் கழித்தார்கள்.

 

     726. மதுப்பிலிற் றியமரை மலரின் கொள்ளையும்

        விதுக்கதிர் படத்தனி விரியுங் காவியு

        மெதிர்ப்பொடு களிப்புமா குலமு மெய்திடக்

        கதிர்க்கதி ரவன்குட கடற்கு ளாயினான்.

4

     (இ-ள்) அந்தச்சமயம் தேனைச் சொரியா நிற்கும் மிகுதியான தாமரைப் புஷ்பங்களும் சந்திரனது பிரகாசமானது தம்மீது பட ஒப்பில்லாது மலராநின்ற நீலோற்பலப் புஷ்பங்களும் எதிர்த்தலுடன் துன்பமும் இன்பமும் பொருந்திடும்படிக் கிரணங்களையுடைய சூரியனானவன் மேல்பாற் சமுத்திரத்தினகம் போய்ச் சேர்ந்தான்.

 

     727. நீருறை பறவையின் குலமு நீடரு

        பாரினில் விலங்கின மியாவும் பண்ணறாக்

        காருறு சோலைவாய்ச் சுரும்புங் கண்படைத்

        தூர்வன வெவையுநல் லுறக்க முற்றதே.

5

     (இ-ள்) சூரியனானவன் அவ்வாறு போய்ச்சேர ஜலத்தின்கண் வாசஞ்செய்யா நிற்கும் பட்சிகளினது கூட்டங்களும் நீட்சிபொருந்திய இப்பூமியின் கண்ணுள்ள சகல மிருகக் கூட்டங்களும் இசை மாறாத மேகமானது தங்கிய சோலையின் கண்ணுள்ள வண்டுக் கூட்டங்களும் எல்லாவிதமான ஊர்வனங்களும் தங்களது கண்களை மூடி நல்ல உறக்கத்தைப் பொருந்தின.

 

     728. போதடைந் திருளெனும் படலம் போர்த்திட

        மாதவ ரெனுமுகம் மதுவு மன்னருந்

        தாதவிழ் நதிக்கரைத் தருவி னீழலிற்

        சோதிமா முகமலர் விழிக டூங்கினார்.

6

     (இ-ள்) அன்றியும், சூரியனானவன் அஸ்தமித்து அந்தகாரமென்னும் போர்வையானது எவ்விடத்தையும் மூடிட மகாதவத்தை உடையவரென்று சொல்லாநிற்கும் நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களும் வியாபாரிகளான மற்றுமரசர்களும் தழைகள் அவிழாநின்ற அவ்வாற்றின் கரையின் கண்ணுள்ள விருட்ச நிழலில் பிரகாசத்தை யுடைய பெருமையுற்ற தங்களது முகத்திற் பொருந்திய தாமரைமலர் போலும் கண்களானவை தூங்கினார்கள்.