பக்கம் எண் :

சீறாப்புராணம்

5


முதற்பாகம்
 

           தருமமும் பொறையு மறிவுமற் றறிந்துன்

               றன்னையு மென்னையு மறியப்

          பெருவரந் தருவா யாதிநா யகனே

               பேதியாச் சோதிமா முதலே.

3

பதவுரை 

     ஆதி நாயகனே - பிரதானமான நாயகனே, சோதி மாமுதலே - பிரகாசத்தை யுடைய மகத்தாகிய யாவற்றிற்கும் முதன்மையனான ஹக்கு சுபுகானகு வத்தஆலாவே, இருவிழிசிவந்து - இரண்டு கண்களும் செந்நிற மடைந்து, கனல்பொறிதெறிப்ப - நெருப்புப் பொறிகள் தெறிக்கும் வண்ணம், எடுத்த கை கதையினால் - கைகளிற்றாங்கிய தண்டாயுதத்தினால், உறுக்கி வரும் - அதட்டிக் கொண்டு வராநிற்கும், அவர் எதிர் நின்று - முன்கர் நக்கீராகிய அவர்கள் முன்னால் நின்று, ஒரு மொழிகேட்ப - ஒரு வார்த்தையை வினவ, மறுமொழி - அதற்கு மறுவார்த்தை, கொடுத்திட அறியேன் - கொடுக்க வுணர்ந்திலன், தருமமும் பொறையும் - புண்ணியத்தையும் பொறுமையையும், அறிவும் மற்று அறிந்து - ஞானத்தையும் தெரிந்து, உன் தன்னையும் என்னையும் அறிய - உன்னையும் என்னையும் அறிவதற்கு, பெருவரம் தருவாய் - பெரிய வரத்தை யருளுவாய்.

 

பொழிப்புரை

     பிரதானமான நாயகனே! பிரகாசத்தையுடைய மகத்தாகிய யாவற்றிற்கும் முதன்மைய னான ஹக்கு சுபுகானகு வத்த ஆலாவே! இரண்டு கண்களும் செந்நிற மடைந்து நெருப்புப் பொறிகள் தெறிக்கும் வண்ணம் கைகளிற் றாங்கிய தண்டாயுதத்தினால் அதட்டிக் கொண்டு வராநிற்கும் முன்கர் நக்கீ ராகிய அவர்கள் முன்னால்நின்று ஒரு வார்த்தையை வினவ, அதற்கு மறுவார்த்தை கொடுக்கவுணர்ந்திலன், புண்ணியத்தையும் பொறுமையையும் ஞானத்தையும் தெரிந்து உன்னையும் என்னையும் அறிவதற்குப் பெரிய வரத்தை யருளுவாய்.

 

     4. கடலினை மலையைக் கதிர்மதி யுடுவைக்

           ககனமற் றறுசொடு குறுசைப்

       புடவியைச் சுவனப் பதியினை யமரர்

           பொருந்திட மடுக்கடுக் கவையை

       வடிவுறத் தனது பேரொளி யதனால்

           வகுத்துவெவ் வேறென வமைத்தே

       யுடலினுக் குயிரா யுயிரினுக் குடலா

           யுறைந்தமெய்ப் பொருளினைப் புகல்வாம்.

4