பக்கம் எண் :

சீறாப்புராணம்

649


முதற்பாகம்
 

1728.குரிசிறன் னுளத்தி னச்சஞ் சபுறயீல் குறித்துப் பின்னும்

    வரிசையின் விழித்துச் சோதி முகம்மதே வருந்தன் மேலோன்

    பரிவுட னும்பால் வெற்றிப் பதவிக ளளித்த தியாவுந்

    தெரிதரக் கேண்மி னென்னச் செய்யவாய் திறந்து சொல்வார்.

70

      (இ-ள்) அவ்விதம் துன்பமடையவே ஜபுறயீல் அலைகிஸ்ஸலா மவர்கள் குரிசிலான நபிமுகம்மது சல்லல்லாகு அலைகிவசல்ல மவர்களினது மனதின் கண்ணுள்ள பயங்கரத்தை மனசின் கண்ணுணர்ந்து மறுத்தும் சங்கையோடு கூப்பிட்டுப் பிரகாசத்தை யுடைய முஹம்மதானவர்களே! நீங்கள் வருந்தாதீர்கள் உங்கள்பால் மேலவனான ஹக்கு சுபுகானகுவத்த ஆலாவானவன் அன்புடன் அருளியதாய் விஜயத்தை யுடைய பதவிகளெல்லாவற்றையும் தெரியும் வண்ணம் கேளுங்களென்று தங்களின் அழகிய வாயைத் திறந்து சொல்ல ஆரம்பித்தார்கள்.

 

1729.வானுல கினினீ ராடை மண்ணுல கினில்வெண் டிங்கள்

    பானுவி னரிதா யுள்ள படைப்பினி லெவைக்கு மேலா

    மீனமின் முகம்ம தைப்போ லிலையென வரிசை மேலுந்

    தானவன் பெருமை மேலு மாணையிற் சாற்றி னானால்.

71

      (இ-ள்) தானவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் வானலோகத்தின் கண்ணும் சமுத்திரத்தை ஆடையாக உடைய பூலோகத்தின் கண்ணும் வெண்ணிறத்தைக் கொண்ட சந்திர சூரியனிலும் இவையல்லாத மற்றும் அருமையாயுள்ள படைப்புகளில் யாவற்றிற்கும் மேலான இழிவற்ற முகம்மதைப் போல யாதொன்றுமில்லை யென்று தனது வரிசையின்மீதும் பெருமையின்மீதும் பிரமாணிக்கத்துடன் சொன்னான்.

 

1730.செந்நெலங் கழனி சூழுந் திமஸ்கினின் கபீபு வேந்தன்

    பொன்னணிப் புரோசை நால்வாய்க் களிறொடும் புரவி யோடு

    மிந்நகர்ப் புறத்திற் சார்ந்தங் கிருந்தன னதனால் தீனின்

    மன்னவ துன்ப மென்ப வருவதொன் றில்லை யன்றே.

72

      (இ-ள்) அன்றியும், தீனுல் இஸ்லாமென்னும் மார்க்கத்திற்கு அதிபரானவர்களே! அழகிய செந்நிறத்தை யுடைய நெற்களைக் கொண்ட வயல்களானவை வளையப் பெற்ற திமஸ்கு நகரத்தினது ஹபீபரசன் பொன்னாலியன்ற அழகிய கயிற்றையும் நாலப் பெற்ற வாயையுமுடைய யானைகளோடும் குதிரைகளோடும் இந்தத் திருமக்கமா நகரத்தின் பக்கத்தில் பொருந்தி அந்தச் சிற்றூரில் தங்கியிருக்கின்றான். அதனால் வருத்தமென்பது யாதொன்றும் வராது.