பக்கம் எண் :

சீறாப்புராணம்

661


முதற்பாகம்
 

      (இ-ள்) அன்றியும், சூலைத் தரித்த மேகமாகிய நன்மை பொருந்திய நபி சுகைபு அலைகிஸ்ஸலாமவர்களின் இரு திருவடிகளது செம்பொன்னாலான கபுசென்னும் பாதரட்சையைத் தங்களின் வீரக்கழலையுடைய பாதத்தின்கண் பொருந்தும்படி சேர்த்துத் தங்களின் குலத்திலுள்ள முன்னவர்கள் தரித்த ஆபரணங்களை மிகவும் அணிந்து கையின்கண் வேலாயுதத்தைத் தாங்கி வீரத்தையுடைய மந்திரவாளைப் பக்கத்தில் சேர்த்தார்கள்.

 

1763.தனக்குறுங் குலத்தி லாய்ந்த தலைவரின் முதியார் பாரிற்

    சினக்கதிர் வேற்கை கொண்ட செல்வர்நாற் பதின்மர் தம்மைக்

    கனக்குற மருங்கு கூட்டிக் காவல ரபித்தா லீபு

    வனக்கட கரியை நேராய் மகிழ்வொடும் புறப்பட் டாரால்.

13

      (இ-ள்) அவ்வாறணிந்த மன்னவரான அபீத்தாலி பென்பவர் தமக்குச் சொந்தமாகிய குடும்பத்தில் தெரிந்தெடுக்கப்பட்ட தலைமைத்தனத்தை யுடையவர்களில் வயதால் முதிர்ந்தவர்களும், இவ்வுலகத்தின்கண் கோபத்தைச் செய்யாநின்ற ஒள்ளிய வேற்படை தாங்கிய கரத்தினைக் கொண்டவர்களுமான நாற்பது செல்வந்தர்களைத் தமது பக்கத்திற் பெருமையுடன் கூட்டிக் கொண்டு வனத்திற் சஞ்சரியா நிற்கும் மதத்தினைக் கொண்ட யானைக்கொப்பாய் ஹபீபரசனை நாடி மகிழ்ச்சியோடும் புறப்பட்டார்.

 

கலிவிருத்தம்

 

1764.மாதிர மெனக்கனக மண்டப நெருங்கும்

    வீதியிடை புக்கிவிறன் மன்னர்புடை சூழக்

    கோதறு மறக்கொடு வரிக்குழுவி னாப்ப

    ணேதமற வந்தவரி யேறென நடந்தார்.

14

      (இ-ள்) அவ்விதம் புறப்பட்ட அவர் வெற்றியையுடைய அரசர்களாகிய அந்நாற்பது பேரும் தமது பக்கத்திற் சூழ்ந்து வரும் வண்ணம் குற்றமற்ற கொலைத் தொழிலைக் கொண்ட புலிக் கூட்டத்தின் மத்தியில் களங்கமில்லாது வந்த ஆண் சிங்கத்தைப் போன்று மலைகளுக்கொப்பான பொன்னினாற் செய்த மாளிகைகள் நெருங்கப் பெற்ற அம்மக்கமா நகரத்தினது வீதியின் கண் புகுந்து நடந்தனர்.

 

1765.நித்தில நிரைத்துமலர் நீடொடைய னாற்றிப்

    புத்தரி சொழுக்குமுயர் பந்தரிடை புக்கிச்

    சித்திர விறற்குரிசில் செவ்வியழி யாத

    மத்தகரி யைத்திமஸ்கு மன்னையெதிர் கண்டார்.

15