| 
 முதற்பாகம் 
  
2320. 
கட்டிவைத் தகன்ற நாட்டொடுத் தவன்றன் 
          பெயரினைக் கருத்தினி லறியே 
     னெட்டியெத் தலத்துந் திரிந்தன னிவ்வூ 
          ருளனென வறிகிலேன் புவியின் 
     மட்டறுங் குலத்தி லிக்குலத் தின்னான் 
          மகவென்று மறிகிலே னெதிர்ந்து 
     கிட்டிடி லுருக்கண் டெளிதினி லறிவே 
          னெனக்கிளத் தினன்பெருங்
கிளையோன். 
23 
      (இ-ள்) அவ்வாறு
கூறப் பெரிய குடும்பத்தை யுடையவ னான அந்தக் காம்மாவென்பவன் என் கால் விரல்களைக் கட்டி வைத்து
நீங்கிய நாள் தொடுத்து அவனது நாமத்தை எனது கருத்தின் கண்ணறிந்திலன். எத் தலங்களிலும் தாவி
யலைந்தேன். இந்நகரத்தி லுள்ளவனென்று அறிகிலன். இப்பூமியி னிடத்துள்ள அளவற்ற கூட்டத்தில்
இக்கூட்டத்தில் இன்னவனுடைய புத்திரனென்றும் அறிகிலன். என்னை எதிர்ந்து கிட்டினால் அவனது
சொரூபத்தைப் பார்த்து இலகுவில் அறிவே னென்று கூறினான். 
  
2321. 
கருமுகிற் கவிகை நந்நபி காம்மா 
          வுரைத்தசொற் கருத்தினி லிருத்திக் 
     குருதியுந் தசையுஞ் சிதறுசெங் கதிர்வேற் 
          கொழுந்தடக் கரத்தபித் தாலி 
     புரியகண் மணியாய் வருமலி தமையென் 
          னுழையினிற் கொடுவரு கென்னப்
     பரிவினிற் றூதை விடுத்தன ரவரும் 
          பண்புற விரைவொடு மெழுந்தார். 
24 
      (இ-ள்) கரிய
மேகக் குடையை யுடைய நமது நாயகம்நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு
அலைகிவசல்ல மவர்கள் அக்காமா வென்பவன் அவ்வாறு கூறிய வார்த்தைகளைச் சிந்தையி லிருக்கச்
செய்து இரத்தமும் மாமிசமும் சிதறா நிற்கும் சிவந்த கிரணங்களைக் கொண்ட வேலாயுதத்தை யுடைய
செழுமையான பெரிய கையினது அபீத்தாலி பென்பவரின் சொந்தக் கண்களின் தாரையாகி இவ்வுலகத்தின்கண்
வந்த அலிறலி யல்லாகு அன்கு அவர்களை அன்போடும் என்னிடத்திற் கூட்டிக் கொண்டு வருவீராக வென்று
ஒரு தூதுவரை அனுப்பினார்கள். அந்தத் தூதுவரும் தகுதி பொருந்தும் வண்ணம் சீக்கிரமாய் எழும்பினார். 
  
2322. 
சிங்கவே றனைய அலிதிருக் கரத்திற் 
          செங்கதிர் வாட்கிடந் திலங்கத் 
     தங்கிய மரவத் தொடைபுரண் டசையத் 
          தானவன் புலிவர னோக்கி 
 |