"இறக்கை முளைத்த எழில்மிகும் கிள்ளை பறக்க விரும்புதல் பண்பே ஆகும்! சிறக்கத் திருமணம் செய்திடும் பருவம் பிறக்கக் கண்டும் பேசா திருந்தால் எவரும் வருந்துவர்; எண்ணமே கனவாய் அவரை வருத்தும் அதுதான் இயற்கை நினைவின் நிழலே நெஞ்சில் படிந்து கனவாய் வெடித்துக் கருத்தைக் கலக்கக் கண்டும் வீணே காலம் கடத்திச் சென்றால் பயனே சிறிதும் விளையா! இளவர சிக்கே ஏற்றவ ரான இளவர சொருவரை இன்றே தேர்வோம்!" என்றார் அமைச்சர், ஏற்றார் அரசர்! "ஒன்றே சொல்வேன்!" என்றான் புலவன். "சொல்வதைச் சொல்லுக; துரிதமாய்ச் சொல்லுக நல்லதைச் சொல்லுக; அல்லதைக் கொல்லுக" என்றார் மன்னர். இருந்தவ ரெல்லாம் ஒன்றாய்ப் புலவனை உற்று நோக்கினர். "வரும்பொரு ளுரைக்கும் பெருமதி படைத்த திருமிகும் அமைச்சர் செப்பிய தெல்லாம் ஏற்பவர் கேட்ப தென்னவென் றறியா தேற்றிட மற்றவை ஈவதற் கொப்பே! விரும்புதல் வழங்கா விடினும் வெறுப்பதை விரும்பிடச் செய்வது பெருந்துயர் விளைக்கும் தாமாய்க் கனவில் தேர்ந்தவ ரிருக்க நாமாய் ஒருவரை நடுவினில் தேர்வது |