தோழியரை வினாவுதல் இயல் - 27 ஏதுக்கு எனை இந்த வாதைக்கு உள்ளாக்கி எங்கே இழுத்தே குறீர்? எல்லோரும் ஒன்றாகி என்தனிமை கொல்கின்ற தேனோ எடுத்தோ துவீர்? தீதுக்கு அஞ்சாத தீயவரும் எனைவாட்டும் செயலாற்ற அஞ்சு வாரே, தீமையே நினைக்காத தோழிகாள்நீங்களெனைச் சித்திரவதை செய்ய லாமோ? வாதுக்கு நிற்காத சாதுக்களை மோதும் வன்னெஞ்சம் கொள்ள லாமோ? மன்னரே ஆயினும் எண்ணம்போற் குடிகளை வாட்டிடச் சொல்ல லாமோ? தோதுக்கு இணங்காத பேதைக்குக் கொடுந்துன்பம் சூழ்ந்திடச் செய்ய லாமோ? துணைவனே இலையென்ற துணிச்சலே அல்லவா தோழிகாள் சொல்லு வீரே! தாயா யணைத்துத் தவச்சேயாய் வளர்த்தஎன் தந்தையும் தவறு வாரோ? தந்தையே ஆயினும் சிந்தைவிரும் பார்களின் தாரமாய்ச் செய்தல் முறையோ? தாயா ரிருந்திடில் வாயா லுரைக்குமுன் தானாய்ப் புரிந்தி டாரோ? தாரமாய்க் கொண்டவன் கோரமாய் வதைக்கையில் தந்தையும் வதைப்பதுண்டோ? |