"ஆருயிரே, என்மகளே! தேறுதலே கொள்வாய்; அதிவிரைவில் நின்னருகில் அவனைச்சேர்ப்போ மென்று" கூறுகின்ற தந்தையரைக் கோபமுடன் பார்த்து "கொற்றவரே வாக்குறுதி பெற்றதுவே போதும் ஆறுகின்ற நெஞ்சையேபுண் ஆக்கிடுதல் வேண்டாம்; ஆசைக்கனல் தூண்டி விட்டகன் றிடவும் வேண்டாம் மீறுகின்ற என்துயரம் வீறுகொள்ளு முன்பே மீண்டிடுவீர்" என்றுஅவள் தாண்டிக்குதித் தாளே! சாடிவசை பாடுகின்ற சுலைகாமுகம் நோக்கித் "தனிமையினால் அமைதிதரும் இனிமை காணுவாயே சேடியரின் சொற்படியே, ஓடியாடி டாமல் சீறிப்பாயும் மனக்குதிரை அடக்கியாள வேண்டும் கோடித்தவம் செய்துபெற்ற குலவிளக்கே! உன்னைக் கோருகின்ற என்கவலை தீரும்படிச் செய்வாய்! கூடிநிற்கும் எங்களைநீ வாடிடச்செய் யாதே. கோபமேதும் கொள்ளவேண்டாம்" என்றனர்தை மூஸே! "பாபத்திற்கே அஞ்சிடாமல் கோபத்திற்கு அஞ்சிப் பல்லிளித்து நிற்பதென்ன சொல்லிடுவீர்! என்றன் சாபத்திற்குச் சிக்கிடாமல் தப்பியோடு வீரே! தாமதிக்க வேண்டாம்; ஆமாம்!" என்றாள் சுலைகாவே. கோபத்தீயை அள்ளிவீசும் மகளைமன்னர் பற்றிக் "கொடுங்கள் செய்தபொன் விலங்கை" எனறார். இதைக்கேட்டுச் "சாபத்திற்குத் துணிந்திட்டீரோ?" என்ற சுலைகாவின் தாள்பிடித்துத் துடிக்கும்கையால் விலங்கு பூட்டினாரே! |